search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்ககுதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளிய போது எடுத்த படம்.
    X
    தங்ககுதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளிய போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபறி வைபவம்

    ஸ்ரீரங்கம் ரெங்காநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் (டிசம்பர்) 18-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோவில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது.

    அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இந்த காட்சியை திரளான பக்தர்கள் பரவசத்தோடு கண்டு நம்பெருமாளை வணங்கினர்.

    இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார். அங்கு இரவு 7 மணிமுதல் இரவு 10 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெற்றது. 

    இரவு 10.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். 

    இவரை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிதுநேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணா எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறி வைபவமாகும். வேடுபறி வைபவத்தின் ஒருபகுதி பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடத்திக்காட்டப்பட்டது. இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைவழங்கப்பட்டது.

    விழாவின் 10-ம் திருநாளான 7-ந் தேதி தீர்த்தவாரியும், 8-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ஸ்ரீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×