search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 18-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19-ந் தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான 28-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    29-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார்.

    அங்கு மாலை 6 மணி முதல் மாலை 6.15 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜன சேவையும் நடைபெற்றது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் 12.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5 மணி முதல் 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 7 மணிமுதல் இரவு 10 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    10-ம் திருநாளான 7-ந் தேதி தீர்த்தவாரியும், 8-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெய ராமன், அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×