search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆனந்த நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆனந்த நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்ந்து வரும் நாளில் சிவன் கோவில்களில் நடராஜபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார கண்டு தரிசிக்கப்படுவதே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

    அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வெள்ளி ரிஷபம், பூதவாகனம், சந்திரபிரபை என வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு நடைபெற்றன.

    விழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதில் மூலவர் ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைக்கு பின்னர் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 5 தேர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் வந்த தேர்கள், இரவு 7.30 மணியளவில் நிலையை வந்தடைந்தன. பின் தேர்களில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு இரவு 10 மணிக்கு மேல் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

    தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரையில் திருவாபரண அலங்கார காட்சியும், 11 மணிக்கு ஆனந்த நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ராஜ அலங்காரத்துடன் சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெற்றது.


    சாமி தரினத்தை காண ஆயிரங்கால் மண்டபம் முன்பு கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    இதைத் தொடர்ந்து மதியம் 1.45 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் கிழக்கு சன்னதி வழியாக 4 ரதவீதிகளிலும் வீதிஉலா சென்று மதியம் 2.30 மணியளவில் மீண்டும் கோவிலுக்குள் வந்து, ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மாலை 3.15 மணி அளவில் ராஜசபையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தேவாரம், திருவெம்பாவை, பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து மூலவர் ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நடன பந்தலுக்குள் ஆடல் அரசரான மூலவர் ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைப்பார்த்து நடன பந்தலுக்கு வெளியே திரண்டிருந்த பக்தர்கள் ‘ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! சிவ, சிவ..ஓம் நமசிவாய..’ என்று பக்தி கோஷம் எழுப்பியபடி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோவில் உள்பிரகாரத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து கருவறையில் வைத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் கடலூர் மாவட்டமின்றி பிறமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று ( புதன்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா செல்லும் காட்சியும், நாளை( வியாழக்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. இத்துடன் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×