search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 2-ம் நிலை கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டு உள்ளதை காணலாம்.
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 2-ம் நிலை கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டு உள்ளதை காணலாம்.

    சமயபுரம் கோவில் ராஜகோபுரத்தின் 2-ம் நிலை கட்டுமான பணி தொடங்கியது

    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 2-ம் நிலை கட்டுமான பணி நேற்று தொடங்கியது.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்பது ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்றது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

    இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

    பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக சாரம் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகளுக்கு தேவையான சவுக்கு கம்புகள், செங்கல், மணல், ஜல்லி, சிமெண்டு போன்ற பொருட்கள் இறக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதில் ராஜகோபுரத்தின் முதல் நிலையில் பணிகள் நிறைவு பெற்று கடந்த 13-ந் தேதி கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று 2-ம் நிலை கட்டுமான பணி தொடங்கியது. அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் இன்னும் 1½ வருடத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×