search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆறுதல் தரும் அறுபடை வீடுகள்..!
    X

    ஆறுதல் தரும் அறுபடை வீடுகள்..!

    முருகனுக்கு உகந்த கந்தசஷ்டிக்கு முருகனின் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபாடு செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
    திருப்பரங்குன்றம்

    முதல்படை வீடு. இங்கு சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்செந்தூர்

    இரண்டாம் படைவீடு. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் ‘அலைவாய்’ என்றும் பெயர் கொண்டது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த முருகனின் திருவடிகளை வணங்கினால் பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற நம்பிக்கையுள்ளது.



    பழநி

    மூன்றாம் படைவீடு. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும் என்பார்கள். அதுமட்டுமா.. 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பழநி மலை வந்து, காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் ‘அனைத்தும் ஒன்றே’ என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கையை உணரும் ஞானஒளியையும் பெறலாம் என்கிறார்கள்.

    முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் போன்றவற்றை சாப்பிட்டால் நோய் தீரும். பழநி கோவிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது முருகன் சிலை, போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

    சுவாமிமலை

    நான்காம் படைவீடு. சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ‘சிவ குருநாதன்’ என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.



    திருத்தணி

    ஐந்தாம் படைவீடு. பொதுவாக அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், இங்கே மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். சூரனுடன் போரிட்டபோது ஏற்பட்ட காயமாம். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் ‘தணிகை’ என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சோலைமலை

    ஆறாவது படைவீடு. அவ்வையிடம், ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று சாதுரியத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோவில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திரு விளையாடல் புரிந்தார் முருகன். தன்னை வழிபட்டவருக்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார்.
    Next Story
    ×