search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம் நடந்த காட்சி.
    X
    திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம் நடந்த காட்சி.

    கந்தசஷ்டி 3-ம் நாள்: சுவாமி ஜெயந்திநாதர்- வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா 3-ம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து உச்சிகால தீபாராதனையும் நடந்தது.

    நேற்று விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. அதேபோல், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கும் அபிஷேகம் அலங்காரமாகி தீபாரதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    மாலை 4.15 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.


    அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த போது எடுத்த படம்.

    பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×