search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சண்முகர், வள்ளி- தெய்வானைக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
    X
    சண்முகர், வள்ளி- தெய்வானைக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

    முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று விநாயகர் பூஜை மற்றும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை, முத்துக்குமாரருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல் திருஆவினன்குடி கோவிலில் உச்சிகால பூஜையில் குழந்தைவேலாயுத சுவாமிக்கு காப்பு கட்டுதலும், மலைக்கோவிலில் உச்சிகால பூஜையில் விநாயகர், மூலவர் சின்னக்குமாரர், சண்முகர் வள்ளி- தெய்வானை, துவார பாலகர்கள், கொடிமரம், மயில், நவவீரர்கள் ஆகியோர்களுக்கு காப்புகட்டுதலும் நடைபெற்றது. அதன் பின்னர் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.



    7 நாட்கள் நடைபெறும் விழாவில், தினசரி, சின்னக்குமாரர், சண்முகர் வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி பகல் 2.30 மணிக்கு மலைக்கோவிலில் மூலவரிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மழைக்கொழுந்து அம்மனுக்கு விசேஷபூஜை நடக்கிறது. பின்பு சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி போன்ற ஆயுதங்களுடன் வீரபாகு, நவவீரர்களுடன் போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன் பின்னர் கோவில் நடைசாத்தப்படுகிறது. இதை தொடர்ந்து சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பாத விநாயகர் கோவில் வந்து அடைகிறார். பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமார சுவாமி வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பாதவிநாயகர் கோவில் வருகின்றனர். பின்பு சக்திவேல் திருஆவினன்குடி கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து சக்திவேலுடன் பெரிய தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


    சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டதை படத்தில் காணலாம்.

    25-ந் தேதி மாலை 6 மணிக்கு அடிவாரம் வடக்கு கிரிவீதியில் யானை முக சூரன்வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்வதமும் ,தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வெற்றி விழாவும் இரவு 10 மணிக்கு மேல் மலைக்கோவிலில் சம்ரோஜனை பூஜைக்கு பின் ராக்கால பூஜை நடக்கிறது. 26-ந் தேதி காலை 10.45 மணிக்கு சண்முகர், வள்ளி- தெய்வானை, திருக்கல்யாணமும், பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி- தெய்வானைக்கு இரவு 7.15 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி 25-ந் தேதி தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகார திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×