search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது
    X

    திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது

    திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை, இரவு வேளைகளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் நிறைவுநாளையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதம், தோமால சேவை, அர்ச்சனை சேவை ஆகியவை நடந்தது. கோவிலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவதும், சடாரி வைப்பதும் ரத்து செய்யப்பட்டது.

    உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, விஸ்வசேனர், சக்கரத்தாழ்வார் ஆகியோரை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வராகசாமி கோவிலுக்கு அருகில் கொண்டு சென்று முக மண்டபத்தில் வைத்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு புண்ணியாவதனம், முகப்பிரசாரனை நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.



    ஸ்ரீவாரி புஷ்கரணியில் தீர்த்தவாரிக்காக எழுந்தருளிய சக்கரத்தாழ்வாரை படத்தில் காணலாம்.

    அதைத்தொடர்ந்து ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது புஷ்கரணியில் கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் புனிதநீராடினர். பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குள் எடுத்து செல்லப்பட்டனர். கோவிலில் மூலவருக்கு கைங்கர்யமும், யாக சாலையில் சிறப்பு ஹோமமும் நடந்தது.

    இரவில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதையடுத்து கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.
    Next Story
    ×