search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குணசீலம் பெருமாள்கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.(உள்படம்: ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சீனிவாச பெருமாள்)
    X
    குணசீலம் பெருமாள்கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.(உள்படம்: ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சீனிவாச பெருமாள்)

    பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் தேரோட்டம்

    குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ரெங்கா, ரெங்கா’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி அருகே உள்ள குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குணசீல மகரிஷியின் தவத்தை மெச்சி பெருமாள் பிரசன்ன வெங்கடேசனாக காட்சியளித்த தலமாகும். இங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் லட்சுமியை தாங்கி செங்கோல் ஏந்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்ததலத்தில் வந்து 48 நாட்கள் தங்கியிருந்து வணங்கினால் பாதிப்பு நீங்கி தெளிவடைவார்கள் என்றும், திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்தால் அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இத்தலத்தில் குணசீல மகரிஷிக்கு காட்சியளித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் இதனை அடிப்படையாக கொண்டு இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலையில் பல்லக்கிலும், இரவு 8 மணியளவில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், தங்க கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.


    வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் தேருக்கு பின்னால் அங்க பிரதட்சணம் செய்த பக்தர்கள்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக காலை 5.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியாருடன் தேரில் எழுந்தருளினார். காலை 8.42 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ரெங்கா, ரெங்கா‘ என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேருக்கு பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் அங்க பிரதட்சணம் செய்தனர். காலை 9.16 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டன. மாலை 4 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை) ஸப்தாவரணமும், நாளை (செவ்வாய்க்கிழமை) ஆடும் பல்லக்கும் நடக்கின்றன. இந்தாண்டு சாமி புறப்பாடு நடைபெறும் வாகனங்களுக்கு தாமிர தகடு போர்த்தி தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் தங்கமயமான வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அலாவுதீன், விஜயலெட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் மற்றும் போலீசார் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் செய்திருந்தார்.
    Next Story
    ×