search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தசரா திருவிழாவையொட்டி, திருச்செந்தூரில் பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    தசரா திருவிழாவையொட்டி, திருச்செந்தூரில் பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றதாகும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். நவராத்திரி விழாவே இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    அகத்திய முனிவரின் சாபத்தால் எருமை தலையும், மனித உடலும் பெற்ற வரமுனி தனது விடாமுயற்சியால் பற்பல வரங்களை பெற்று, மகிஷாசூரனாக மாறி தேவர்களை துன்புறுத்தினார். மகிஷாசூரனின் இடையூறுகளை தாங்க இயலாத தேவர்கள், அன்னையை நோக்கி வேள்வி நடத்தினர். வேள்வியில் இருந்து தோன்றிய அன்னை பராசக்தி, மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடும் இவ்விழா தமிழகத்திலேயே முதலிடத்தை பெறுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை, இரவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு கோலங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    9-ம் திருநாளான நேற்று வெள்ளிக்கிழமை) அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    10-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


    அம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அதிகாலை 5 மணிக்கு சவுந்தரபாண்டிய நாடார்- தங்ககனி அம்மாள் கலையரங்கில் அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதிஉலா புறப்படுதல், மாலை 5.30 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    தசரா திருவிழாவையொட்டி, ஒவ்வொரு ஊரிலும் நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, வேடம் அணிந்த பக்தர்கள் காணிக்கை வசூலித்து 10-ம் திருநாளில் கோவிலில் வழங்குவார்கள். விரதம் இருந்த பக்தர்கள் தங்குவதற்காக ஒவ்வொரு ஊரிலும் கோவிலின் அருகில் தசரா குடில் அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு தங்கியிருந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் தினமும் ஒரு வேளை பச்சரிசி உணவு மட்டும் சாப்பிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுவினரின் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மேற்பார்வையில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கந்தசாமி, ராஜாராம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்சோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×