search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
    X

    பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலாவும் நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. விலங்குகளில் வலிமை மிக்கது சிங்கம். ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் விலங்குகளில் நான் சிம்மமாக இருப்பேன் என்பார். பாதி மனிதன், பாதி சிங்கம் உருவம் தான் நரசிம்மர் அவதாரம். இதை விளக்கும் வகையில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதிஉலாவின் முன்னால் நடன கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். நாட்டுப்புற நடனமும் நடந்தது. கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது. விஷ்ணு, நரசிம்மர் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    வீதிஉலாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, கோவில் துணை அதிகாரி கோதண்டராமாராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை ஊஞ்சல் சேவை ஆகியவை நடந்தது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மலையப்பசாமி முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
    Next Story
    ×