search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மா மண்டபம் சாலையில் உள்ள யாகசாலையில் ஹயக்கிரீவ வித்யா விஜய இஷ்டி ஹோமம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    அம்மா மண்டபம் சாலையில் உள்ள யாகசாலையில் ஹயக்கிரீவ வித்யா விஜய இஷ்டி ஹோமம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    காவிரி மகா புஷ்கரம்: ஸ்ரீரங்கத்தில் 9-வது நாளாக பக்தர்கள் புனித நீராடல்

    காவிரி மகா புஷ்கரத்தையொட்டி ஸ்ரீரங்கத்தில் 9-வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர். மேலும் யாகசாலையில் வருண ஹோமமும், கோபூஜையும் நடைபெற்றது.
    காவிரி மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன.

    முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க விஷ்வந்சேன இஷ்டி ஹோமமும், 2-ம் நாள் நன்மக்களைப்பெற சந்தான கோபால கிருஷ்ண இஷ்டி ஹோமமும், 3-வது நாள் சத்ரு பயம் நீங்க, ஆயுள் நீடிக்க, நினைத்த காரியங்கள் வெற்றிபெற சுதர்சன இஷ்டி ஹோமமும், நான்காம் நாள் லெட்சுமி நாராயண இஷ்டி ஹோமமும், 5-ம் நாள் தன்வந்திரி இஷ்டி ஹோமமும், 6-வது நாள் வைபவ இஷ்டி ஹோமமும், 7-வது நாள் ஸ்ரீயாகம், 8-ம் நாள் மச்சநாராயண இஷ்டி ஹோமம் நடைபெற்றன.

    9-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் வருண ஹோமமும், 8.30 மணிக்கு கோபூஜையும் நடைபெற்றது. பின்னர் கல்வி செல்வம் பெருகவும், புத்தி சாதுர்யம் பெறவும் ஹயக்கிரீவ வித்யா விஜய இஷ்டி ஹோமம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஆழிமலைக் கண்ணா பாசுரம், தொடர் பாராயணமும் வேத, திவ்ய பிரபந்த, இதிகாசமும் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாலை 6.30 மணியளவில் அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு மங்கல ஆரத்தி மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை சாந்தி ஹோமம் நடைபெற்றது. 9-வது நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    காவிரி மகா புஷ்கர விழாவிற்கான ஏற்பாடுகளை காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டியினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×