search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்ட சாமி சிலைகளுக்கு தளியலில் பக்தர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்த காட்சி.
    X
    திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்ட சாமி சிலைகளுக்கு தளியலில் பக்தர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்த காட்சி.

    குமரி மாவட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரம் வருகை: மலர் தூவி வரவேற்பு

    நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தன. சிலைகளுக்கு கரமனை மற்றும் தளியலில் மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தக்கலை வேளிமலை குமாரசாமி, பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி, குமரிமாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் கடந்த 18-ந் தேதி திருவனந்தபுரம் புறப்பட்டது.

    சரஸ்வதி அம்மன் யானை மீது அமர்ந்து ஊர்வலமாக வலம் வர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசாமி சிலைகள் பின் தொடர்ந்து, திருவனந்தபுரம் நோக்கி ஊர்வலமாக வந்தது. ஊர்வலத்திற்கு வழிநெடுக பக்தர்களால் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்று காலையில் நெய்யாற்றின் கரையில் இருந்து புறப்பட்ட சாமி ஊர்வலத்திற்கு, நேமத்தில் திருவனந்தபுரம் தாசில்தார், நேமம் கிராம அதிகாரி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு கரமனையில் சாமி சிலைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் தளியலில் சாமி சிலைக்கு மலர்களால் பாதை அமைத்தும், மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணியளவில் கிள்ளிப்பாலம் சந்திப்பில் வரவேற்பும், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது. அதைத் தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட சரஸ்வதி அம்மன் பத்மநாபசாமி கோவில் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை குமாரசாமியை ஆரியசாலை கோவிலிலும், முன்னுதித்த அம்மனை செந்திட்டை கோவிலிலும் குடிஅமர்த்தினர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. 9 தினங்கள் சாமிசிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.
    Next Story
    ×