search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர 2-வது நாள் விழா: புனித நீராடிய பக்தர்கள்
    X

    ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர 2-வது நாள் விழா: புனித நீராடிய பக்தர்கள்

    ஸ்ரீரங்கத்தில் நடந்து வரும் காவிரி மகா புஷ்கர 2-வது நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.
    குருபகவான் காவிரி நதிக்குரிய துலாம் ராசியில் பிரவேசிப்பது காவிரி புஷ்கர என அழைக்கப்படுகிறது. கால சுழற்சியின் அடிப்படையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புஷ்கர விழா இந்த ஆண்டு நடப்பதால் காவிரி மகாபுஷ்கர விழாவாக காவிரி கரையோரத்தில் உள்ள மயிலாடுதுறை மற்றும் ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி கரையில் காவிரி மகா புஷ்கர விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த யாகசாலைகளில் இயற்கை முறையில் மரங்களை உராய்வு செய்து நெருப்பை உண்டாக்கி அதன் மூலம் ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. இரவு காவிரி தாய்க்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்திருந்த ஜீயர்கள் மற்றும் துறவிகள், வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்தனர்.

    ஸ்ரீரங்கத்தில் நேற்று இரண்டாவது நாளாக காவிரி மகா புஷ்கரம் விழா நடந்தது. காலை 8 மணிக்கு யாகசாலையில் வருண ஹோமமும், 8.30 மணிக்்கு கோபூஜையும் நடைபெற்றது. பின்னர் உலகம் முழுவதும் உள்ள மக்கள் நன்மைகளை பெற சந்தான கோபால கிருஷ்ண இஷ்டி யாகம் 9.30 மணிக்கு தொடங்கியது.


    காவிரி மகா புஷ்கர விழாவை யொட்டி யாகசாலையில் நேற்று சந்தான கோபால கிருஷ்ண இஷ்டி யாகம் நடந்த போது எடுத்த படம்.

    மதியம் 1 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்றது மாலை 6 மணிக்கு அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை சாந்தி ஹோமம் நடைபெற்றது.

    காலையில் ஹோமம் முடிந்ததும் காவிரியில் பக்தர்கள் புனித நீராடினார்கள். இதே போல் மாலையில் மங்கள ஆரத்தி பூஜை நிறைவடைந்த பின்னர் காவிரியிலும், ஆழ்துளை கிணறுகளில் இருந்து பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீரிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

    காவிரியில் தண்ணீர் அதிக அளவில் இல்லை என்பதால் மணல் தெரியும் பகுதிகளில் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், கூடாரம் அமைத்து குடும்பத்துடன் தங்கி இருந்தனர். இது தவிர அம்மா மண்டபம் சாலையில் பல இடங்களிலும் பக்தர்கள் சாலை ஓரம் தங்கி இருந்தனர். பஸ்களில் வந்தவர்கள் அதனை சுற்றி அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டனர்.

    அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து அய்யாளம்மன் படித்துறை வரை காவிரி ஆற்றின் நடுப்பகுதி வழியாக குடிநீர் எடுத்து செல்வதற்காக ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


    காவிரி ஆற்றுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரில் நீராடிய பக்தர்கள்.

    இந்த குழாய்களை தாங்கி நிற்கும் பாலத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் வீற்றிருக்கும் பெருமாள் உருவ படங்கள் பதாகைகளாக வைக்கப்பட்டு உள்ளன. இதனை வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.

    காவிரி புஷ்கர யாக சாலையில் இன்று சத்ரு பயம் நீங்கவும், ஆயுள் ஆரோக்கியம் பெறுவதற்காகவும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்காகவும் சுதர்சன இஷ்டி ஹோமம் நடத்தப்பட இருக்கிறது. காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி அம்மா மண்டபம் முதல் ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் வரை எங்கு பார்த்தாலும் வெளி மாநில பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

    துறவிகள் அவ்வப்போது எழுப்பும் சங்கொலிகளும் ஸ்ரீரங்கம் மக்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 23-ந்தேதி வரை காவிரி மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது.
    Next Story
    ×