search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆழ்துளை கிணறு மூலம் வந்த தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி.
    X
    ஆழ்துளை கிணறு மூலம் வந்த தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

    திருவையாறில் காவிரி மகா புஷ்கர விழா: பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடு

    திருவையாறில் காவிரி மகா புஷ்கர விழா தொடங்கியது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைத்து பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    காவிரி மகா புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலமாகும். ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்சியானார்.

    அதைத்தொடர்ந்து துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் மகா புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா நடைபெறுவதால் காவிரி உற்பத்தியாகும் குடகுமலை முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரையிலும் உள்ள முக்கிய இடங்களில் கொண்டாடப்படுகிறது.அதன்படி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி காவிரி ஆற்றின் புஷ்ய மண்டப படித்துறையில் கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்றது. பின்னர் புஷ்கர யாகம் நடைபெற்றது. தமிழ் அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் தலைமையில் தமிழ் அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை நிறுவனர் டி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தஞ்சை மாவட்ட முன்னாள் கலெக்டர் கங்கப்பா ஆகியோர் முன்னிலையில் இந்த யாகம் நடந்தது. குருக்கள் திருச்செந்தூர் சர்மா மற்றும் குழுவினர் காவிரி புஷ்கர பூஜைகளை செய்தனர்.


    திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் காவிரி மகா புஷ்கர யாகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


    இதில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர சர்மா, சென்னை டாக்டர் தியாகராஜன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தேவஸ்தானம் நடராஜ சாஸ்த்திரி, திருப்பூந்துருத்தி அப்பர் திருமடத்தின் துறை கணேசனார், அம்மன்பேட்டை ராமகிருஷ்ண விவேகானந்த சேவா ஆஸ்ரம சுவாமி கிருஷ்ணானந்தா, சதுரகிரி சித்தர் தங்கமுருகன் மற்றும் தசமிபாலு, பழஅடியார், வேலாயுதம், பழனிநாதன், குஞ்சிதபாதம், அறக்கட்டளை மாவட்ட தலைவர் லட்சுமி நரசிம்மன், பா.ஜனதா நிர்வாகி சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குழாய் மூலம் வரும் தண்ணீரில் பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி யாகம் முடிந்தவுடன் காவிரி ஆற்றில் இறங்கி குழாய் மூலம் வந்த தண்ணிரில் பக்தர்கள் அனைவரும் நீராடி காவிரி தாயை வணங்கினர்.

    தினமும் பக்தர்கள் வந்து குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் துறவிகள் கலந்து கொள்கின்றனர். 19-ந் தேதி காவிரி புஷ்ய மண்டபம் பதிக்கப்பட்ட தபால் தலை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை நிறுவனர் டி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    Next Story
    ×