search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆவணி திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கபெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் வீதி உலா வந்த காட்சி.
    X
    ஆவணி திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கபெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் வீதி உலா வந்த காட்சி.

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (திங்கட்கிழமை) காலையில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து மேலக்கோவிலை சேர்ந்தனர். இரவு 8 மணிக்கு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    முன்னதாக நேற்று காலையில் சுவாமி குமரவிடங்கபெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரையில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் மேலக்கோவில் சென்றனர்.



    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    11-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு செல்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாரானை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள்.

    12-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் வலம் வருகிறார்கள். இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர்(பொறுப்பு) பரஞ்ஜோதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×