search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜொலிக்கும் மின்விளக்கு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் பவனி வந்த காட்சி.
    X
    ஜொலிக்கும் மின்விளக்கு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் பவனி வந்த காட்சி.

    வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கொட்டும் மழையில் தெப்ப திருவிழா

    வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    வரலாற்று புகழ்பெற்ற வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா நேற்று தொடங்கி நாளை வரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் அதிகாலை ஆடி பரணியை முன்னிட்டு வள்ளிமலை கோவிலில் மலை மேலும், மலை அடிவாரத்திலும் உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் பஜனை நிகழ்ச்சியும், இரவில் இன்னிசை பாட்டு பட்டிமன்ற நிகழ்ச்சியும் வள்ளி திருமண நாடக நிகழ்ச்சியும் நடந்தது.

    நள்ளிரவு 12-30 மணிஅளவில் சிறப்பு அபிஷேகமும், தங்க கவசம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    நேற்று மதியம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வள்ளிமலை கோவில் வளாகத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் காட்பாடி துணை தாசில்தார் விஜயகுமார், சோளிங்கர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. (அம்மா) செயலாளர் சோமநாதபுரம் சின்னதுரை, கோவில் செயல் அலுவலர் நிர்மலா, ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வி, மேலாளர் நித்தியானந்தம் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சாமிகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு அருகில் உள்ள சரவணப்பொய்கை குளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    பின்னர் தெப்பத்தில் அமர்ந்தபடி சரவணபொய்கையில் சாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வள்ளிமலை முருகனுக்கு அரோகரா’, ‘வள்ளி, தெய்வானைக்கு அரோகரா’ என விண்ணதிர கோஷம் எழுப்பினர், அப்போது மழை கொட்டியது.

    தெப்ப திருவிழாவில் தி.மு.க. முதன்மை செயலாளரான துரைமுருகன் எம்.எல்.ஏ, வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி.எம்.எல்.ஏ, சோளிங்கர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. (அம்மா ) செயலாளர் சின்னதுரை, கோவில் செயல் அலுவலர் நிர்மலா, ஆய்வாளர் முத்தமிழ்செல்வி, மேலாளர் நித்தியானந்தம் மற்றும் நாட்டாண்மை தாரர்கள் ,உபயதாரர்கள், மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

    இரண்டாம் நாள் தெப்பல் உற்சவம் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதை தொடர்ந்து இரவில் பக்தி திருப்புகழ் பஜனை நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) தெப்பல் உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், விழாக்குழுவினர், உபயதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×