search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொங்களாயி அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் தேங்காய், பழங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு இருந்ததை காணலாம்.
    X
    பொங்களாயி அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் தேங்காய், பழங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு இருந்ததை காணலாம்.

    ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் கோவில் திருவிழா

    ராசிபுரம் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு போதமலை மலையாள தெய்வம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. ஆலமரத்து அடியில் அமைந்துள்ள பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி பெருக்கு பண்டிகையையொட்டி நடந்து வருகிறது.

    இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று மாலை அலங்கத்தாய் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இண்டங்காட்டு கருப்பசாமிக்கு முப்பூஜையும் நடந்தது.

    பின்னர் இரவு பொங்களாயி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் முதலில் ஆடு ஒன்று பலியிடப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கொண்டு வந்த 140 ஆடுகளும் பலியிடப்பட்டன.

    இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற உள்ள சமபந்தி விருந்திற்கு ஏதுவாக பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சி மற்றும் பொங்கல் போன்றவை சமைக்கும் பணி நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.

    திருவிழாவின்போது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சியையோ அல்லது விருந்திற்கு வைக்கப்பட்ட உணவையோ வீடுகளுக்கு பக்தர்கள் கொண்டு செல்வதில்லை. ஆண்கள் மட்டுமே கொண்டாடும் இந்த திருவிழா மூலம் நோய் நீங்குவதாகவும், விவசாயம் செழித்து விளங்குவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் குழந்தை பாக்கியம் கிடைத்து, குடும்ப பிரச்சினை இன்றி வாழ முடிகிறது என்றும் அவர்கள் கூறினர்.

    ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கோவில் திருவிழா தமிழக அளவில் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவில் வடுகம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், பட்டணம், சீராப்பள்ளி, மெட்டாலா உள்பட பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×