search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தர்ப்பணம் செய்யுங்கள்.... குடும்பம் செழிக்கட்டும்..
    X

    தர்ப்பணம் செய்யுங்கள்.... குடும்பம் செழிக்கட்டும்..

    இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள்.
    இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை தினம்.

    மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை வழிபட வேண்டிய மிக முக்கியமான திருநாள். அதாவது அன்று நாம் அவர்கள் தாகத்தை தீர்த்து அமைதிப்படுத்த வேண்டும்.

    அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை (பூசனி, வாழைத்தண்டு தவிர்க்கவும்)யை தானமாக கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள்.

    உயர்சாதிகாரர்களுக்குத்தான் அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள். திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

    தர்ப்பணம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய 12 பேர் மட்டும் தெரிந்தால் போதும்.

    சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.

    ஆடி அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.

    குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் நாளை ஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.

    12 ஆண்டுகள் பலன் கிடைக்கும்

    நாளை ஆடி அமாவாசை திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்களில் வருகிறது. இந்த அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.

    என்ன செய்ய வேண்டும்?

    அமாவாசை தினத்தன்று 4 முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.

    1. புனித நதிகளில் நீராட வேண்டும்.
    2. பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    3. மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.
    4. தானங்கள் கொடுக்க வேண்டும்.
    Next Story
    ×