search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அங்குள்ள ஆற்றில் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.
    X
    சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அங்குள்ள ஆற்றில் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் இன்று ஆடி அமாவாசை: குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள்

    பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்துள்ளனர்.
    தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில்களில் நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு காணிக்குடியிருப்பில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் அமாவாசை திருவிழா மிகுந்த சிறப்புக்குரியது. இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா கடந்த 19-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஆடி அமாவாசை நாளான இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) திருவிழா நிறைவு பெறுகிறது.

    நிறைவு நாள் விழாவை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இன்று தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் ஏராளமான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இப்படி அமைக்கப்பட்டுள்ள குடில்களை அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அம்பை தாசில்தார் வெங்கட்ராமன், வனத்துறை தாசில்தார் சங்கர நாராயணன், சமூக நல பாதுகாப்பு தாசில்தார் பார்வதி தங்கம், கிராம நிர்வாக அதிகாரி நடராஜன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காரையாறில் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். விக்கிரமசிங்கபுரம் நகரசபை மற்றும் மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து சார்பில் லாரிகள் மூலம் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி அரசு பள்ளி மாணவர்கள் நேற்று கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்தனர். பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு குப்பைகள் சேராத வண்ணம் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    பட்டவராயன் கோவிலுக்கு வடபுறம் தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காரையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வெளியூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மற்றொரு அரசு பஸ்கள் மூலம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், டானாவிலேயே நிறுத்தப்படுகிறார்கள். காரையாறு மலைப் பகுதிக்கு செல்ல அரசு வாகனங்கள் தவிர எந்தவொரு தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×