search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கயிலாய பேறு தரும் மாங்கனி திருநாள்
    X

    கயிலாய பேறு தரும் மாங்கனி திருநாள்

    ‘காரைக்கால் அம்மையார்’ கோவிலில் நடக்கும் மாங்கனி விழாவில் கலந்து கொண்டால், இறைவனின் திருப்பாதத்தை அடையும் பெறும் பேற்றை அடையலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    உலகை ஆளும் ஈசனின் வாயாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இவருக்கு காரைக்கால் பாரதியார் வீதியில் தனி ஆலயம் அமைந்துள்ளது.

    காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி என்பதாகும். சிறுவயது முதலே சிவபக்தியிலும், சிவதொண்டு செய்வதிலும் சிறந்தவராக திகழ்ந்தார். இவரது தந்தை தனதத்தன் பெரிய வணிகர். அவர் தன் மகளை, சிறந்த ஒரு வணிகருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். அதன்படி நாகப்பட்டினத்தில் உள்ள பரமதத்தன் என்பவருக்கு, புனிதவதியை திருமணம் செய்து வைத்தார். திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தாள்.

    ஒரு நாள் பரமதத்தன், தனக்குக் கிடைத்த இரண்டு மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை பெற்றுக்கொண்ட புனிதவதி, தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தாள். அப்போது புனிதவதியின் வீட்டிற்கு, பசியோடு ஒரு சிவனடியார் வந்தார். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ, ‘சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள்’ என்றாள்.

    அதற்கு சிவனடியார் ‘தாயே! பசியில் உயிர் போகிறது. ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!’ என்றார்.

    அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்தனுப்பிய மாங்கனி நினைவுக்கு வந்தது. அவற்றில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தாள். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த, சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார்.



    இந்த நிலையில் மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்தான் பரமதத்தன். உணவு பரிமாறும்போது, வீட்டில் இருந்த ஒரு மாங்கனியை கணவனுக்கு பரிமாறினாள் புனிதவதி. மாங்கனியின் சுவை மிகுந்திருந்ததால், இன்னொரு மாங்கனியையும் எடுத்துவரும்படி பரமதத்தன் கூறினான்.

    இதைக் கேட்ட புனிதவதி பூஜை அறைக்குச் சென்று, சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினாள். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். ஆனால் அந்தக் கனி முன்பு உண்ட மாம்பழத்தை விடவும் இரட்டிப்பு சுவை மிகுந்ததாக இருந்தது. இதனால் பரமதத்தன், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான்.

    கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி, நடந்தவற்றை மறைக்காமல் அப்படியே தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெருமானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வப்பிறவி என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினான்.

    பின்னர் தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டான்.

    இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2-வது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.



    கணவனே தன்னை தெய்வம் என்று கூறி வணங்கியதால், இறைவனை வேண்டி பேய் உருவம் பெற்ற புனிதவதி, கயிலாயம் புறப்பட்டுச் சென்றாள். கயிலை மலையின் மீது காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார்.

    அப்போது இறைவன், ‘அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?’ என்று கேட்டார்.

    அதற்கு காரைக்கால் அம்மையார், ‘இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்’ என்று கேட்டார்.

    உடனே சிவபெருமான், ‘அம்மையே! நீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்’ என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம்.

    காரைக்கால் அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனி படைத்தது, சிவபெருமானிடம் அம்மையார் மாங்கனி பெற்றது போன்ற நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில், காரைக்காலில் உள்ள ‘காரைக்கால் அம்மையார்’ திருக்கோவிலில் மாங்கனி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டால், இறைவனின் திருப்பாதத்தை அடையும் பெறும் பேற்றை அடையலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    Next Story
    ×