search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் நிகழ்ச்சிக்காக யானை மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வந்த போது எடுத்த படம்
    X
    ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் நிகழ்ச்சிக்காக யானை மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வந்த போது எடுத்த படம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. யானை மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 7-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர் கொள்ளிடம் ஆற்றில் ஒரு தங்கக்குடம், 29 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்தும், வெள்ளிக்குடங்களில் உள்ள புனித நீரை கோவிலை சேர்ந்தவர்கள் தோள் மீது சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வடக்குவாசல், வடக்கு சித்திரைவீதி, கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரைவீதி வழியாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு தாயார் சன்னதியில் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.



    பின்னர் ஸ்ரீதேவிக்கும், பூதேவிக்கும் அரிய வகை மூலிகைகளில் இருந்து கோவில் ஊழியர்களால் தயாரிக்கப்படும் மணமிக்க தைலம் பூசப்பட்டது. தைலகாப்பு அன்று ஸ்ரீதேவி, பூதேவி, உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் ஆகியோர் மேனிகளில் அணிவிக்கப்படும் திருஆபரணங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, பழுது பார்க்கப்படும் பணியும், எடை சரிபார்க்கப்படும் பணியும் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்களஆரத்தி நடைபெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

    தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்பட்டும் அன்ன பிரசாதத்தில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் சேர்க்கப்பட்ட சாதம் ரெங்கநாச்சியாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.

    Next Story
    ×