search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள் - ஆன்மிக கதை
    X

    வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள் - ஆன்மிக கதை

    முன்பெல்லாம் ஜென் குருக்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக கூறிய தத்துவ வார்த்தைகள் அனைத்தும், ‘வைர வரிகள்’, ‘வைர சூத்திரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
    முன்பெல்லாம் ஜென் குருக்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக கூறிய தத்துவ வார்த்தைகள் அனைத்தும், ‘வைர வரிகள்’, ‘வைர சூத்திரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஜென் தத்துவத்தில் ‘ஒரு சொல்’ என்பது மிகவும் பிரபலமானது. ஏதேனும் துக்கமான சூழலிலோ அல்லது மரணத்தின் தருவாயிலோ, தங்களின் குருவிடம் ‘ஒரு சொல் சொல்லுங்கள்’ என்று கேட்பார்கள். அந்த ஒரு சொல் ஜென் உலகில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஒரு மிகப்பெரிய ஜென் குருவிடம், ‘ஒரு சொல் சொல்லுங்கள்’ என்று கேட்டு ஒரு இளைஞன் வந்தான்.

    அவனிடம் அந்த குரு, ‘பார்!’ என்று மட்டுமே சொன்னார்.

    அவன் ‘அவ்வளவுதானா? அதற்கு மேல் ஏதாவது சொல்லக் கூடாதா?’ என்று கேட்டான்.

    அதற்கு குரு, ‘பார்!.. பார்!..’ என்று கூறிவிட்டு, தன்னுடைய அறைக்குள் சென்று விட்டார்.

    இளைஞனுக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு அவன் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தான். யோசிக்க யோசிக்க அவனுக்கு அந்த ஒரு சொல்லின் உண்மையான தத்துவம் புரியத் தொடங்கியது.

    பார்த்தல் என்பது தான் ஜென்னின் மிகப் பெரிய சாரம். அதன் அடிப்படைத் தத்துவமும் அதுதான். ஞான வாசலைப் பார்த்தல் என்பதில்தான், ஒருவருடைய முதல் கதவு திறக்கிறது.

    உன்னைச் சுற்றிலும் பார், உலகின் இயக்கத்தைப் பார், உயிர்களின் சலனத்தைப் பார், அனைத்திலும் ஊடே ஓடும் இழையைப் பார், விருப்பு வெறுப்பு இன்றி விலகி நின்று பார், பின் உள்ளே பார்.. என நீளும் இந்தப் பட்டியலில் உள்ளிருக்கும் சாரம் ‘பார்த்தல்’ என்பது மட்டுமே.

    ஒரு சீடரின் மகன் இறந்து போனான். தகவல் கிடைத்ததும் வெளியூரில் இருந்து ஓடிவந்தார் அந்த சீடர். மகனின் சவ ஊர் வலத்தின் அந்த சீடரின் குருவும் கலந்து கொண்டார். அந்த குருவிடம் ‘சுவாமி! ஒரு சொல் சொல்லுங்கள்’ என்று கேட்டார் சீடர்.

    ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் இது ஏன்? எதனால்? இந்த நிகழ்வு எப்படி நேர்கிறது? என்பதை ரத்தினச் சுருக்கமாக விளக்கவே ‘ஒரு சொல்’ சொல்லச் சொல்லிக் கேட்பார்கள்.

    குரு, சீடரின் மகன் சவத்தின் முகத்தை மூடியிருந்த திரையை விலக்கி, ‘பார்!’ என்றார்.

    அதை உற்றுப் பார்த்த சீடர் அதன் பிறகு பேசவில்லை. குருவுடன் மவுனமாக சென்றார்.

    ஆம்.. இதை மறைக்கவோ, விளக்கவோ எதுவும் இல்லை. ‘முதலில் இவனது பிறப்பை பார்த்தாய். அதன்பிறகு அவனது வாழ்க்கையைப் பார்த்தாய். இப்போது அவனின் இறப்பையும் பார்’ என்பதே குரு கூறியது.

    ‘வாழ்வில் எதிர்படும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்’ என்கிறது ஜென் தத்துவம்.
    Next Story
    ×