search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள் முகம் செதுக்கப்பட்ட 380 டன் பாறையை வழிபடுவதற்கு திரண்டு வரும் பக்தர்கள்
    X

    பெருமாள் முகம் செதுக்கப்பட்ட 380 டன் பாறையை வழிபடுவதற்கு திரண்டு வரும் பக்தர்கள்

    பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்கள் பெருமாள் சுவாமி முகம் உள்ள பாறைக்கு தீப ஆராதனைகள் காண்பித்து, தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு வருகின்றனர்.
    பெங்களூரு ஈஜிபுரம் கோதண்ட ராமசுவாமி கோவிலில் ஒரே கல்லில் பெரிய அளவில் விஸ்ரூப கோதண்டராம சாமி சிலை வைப்பதற்காக தேவைப்படும் கற்பாறை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு மலைக்குன்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டது. சுமார் 380 டன் பாறையையும், பீடம் அமைப்பதற்கு 230 டன் எடைகொண்ட பாறையையும் வெட்டி எடுக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

    தற்போது சுவாமியின் முகம் மட்டும் செதுக்கப்பட்டு 10 சதவீத பணிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதில் 380 டன் எடையுள்ள பாறையை எடுத்துச்செல்ல 170 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லரும், 230 டன் எடையுள்ள பாறையை எடுத்துச்செல்ல 90 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லரும் கொண்டு வரப்பட்டன. கடந்த 18-ந் தேதி இந்த பாறைகள் பெங்களூருக்கு எடுத்துச்செல்லப்பட இருந்தது.


    380 டன் பாறையில் பெருமாள் முகம் செதுக்கப்பட்டுள்ளதையும், குன்றின் மீது நின்று பக்தர்கள் அதனை தரிசிப்பதையும் படத்தில் காணலாம்.

    இந்த நிலையில் பாறை அதிக எடை கொண்டதாக இருப்பதால் டிரெய்லரில் அதிகமாக டயர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாறையை கொண்டு செல்வதில் சிலநாட்கள் தாமதம் எற்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளி்ல் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது.

    சாலைகள் உலர்வதற்கு ஓரிரு நாட்களாகலாம். இதனாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் வந்தவாசி, செய்யாறு, ஆரணி, சேத்துப்பட்டு மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்கள் பெருமாள் சுவாமி முகம் உள்ள பாறைக்கு தீப ஆராதனைகள் காண்பித்து, தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு வருகின்றனர். 
    Next Story
    ×