search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.(உள்படம்;- சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்).
    X
    நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.(உள்படம்;- சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்).

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    26-ந் தேதி காலை நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு சந்தனு மண்டபத்தை வந்தடைந்தார். 11 மணி முதல் 1 மணிவரை அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



    இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். இரவு 9.30 மணிக்கு தங்க கொடிமரத்தில் சித்திரை தேர் விழாவின் கொடியிறக்கம் நடைபெற்றது. நேற்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கருட மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து 7 மணிக்கு புறப்பட்டு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைந்தார்.

    இரவு 8 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் சேர்ந்தார். இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.
    Next Story
    ×