search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்).
    X
    சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்).

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    9-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி, வழிநடை உபயங்கள் கண்டருளி நேற்று காலை 7 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து அம்மன் புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருளினார். காலை 10.40 மணிக்கு மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி பக்தர்கள் மலர் கரகம் எடுத்து வந்த காட்சி.

    தேரோடும் வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தபோது, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நின்று கொண்டிருந்த பக்தர்கள் மகமாயி தாயே, ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பி அம்மனை தரிசனம் செய்தனர். மதியம் 1.30 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி தூக்கியும், அக்னி சட்டி ஏந்தியும் வந்தனர். பெண்கள், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இது தவிர ஏராளமான பெண் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், தலையில் முளைப்பாரி மற்றும் கரகம் சுமந்தும் வந்தனர். சில பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் வந்தனர். எங்கு பார்த்தாலும் மேள தாளங்கள் முழங்கின. திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு பக்தர்களோடு பக்தராக தீச்சட்டி ஏந்தி சென்றார்.


    தேரோட்டத்தின் போது வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பக்தர்கள் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்ததை படத்தில் காணலாம்.

    விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில், நீர்மோர் மற்றும் குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் நலன் கருதி ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தேரோடும் சாலைகளில் வாகனத்தில் தண்ணீரை தெளித்தபடி சென்றனர். நேற்று இரவு 9 மணிக்கு தேரிலிருந்து அம்மன் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, வெள்ளி காமதேனு வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12-ம் திருநாளான நாளை (வியாழக்கிழமை) காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்துப் பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 13-ம் திருநாளான 21-ம் தேதி பகல் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்து, மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டு வழிநடை உபயங்களுடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். அன்றைய தினத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பறக்கும் காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள சக்தி நகரிலும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுச்சந்தை நடைபெறும் இடத்திலும், சமயபுரம் நால்ரோட்டிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் அருகிலும், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ச.கண்ணனூர் பேரூராட்சியின் சார்பாக செயல் அலுவலர் குமரன் தலைமையில், கொள்ளிடம் நெ.1 டோல்கேட் முதல் சமயபுரம் வரை சுமார் 75 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

    பக்தர்களின் வசதிக்காக 10 இடங்களில் ஆண், பெண்களுக்கு தண்ணீர் வசதியுடன் கூடிய தற்காலிக கழிப்பறைகளும், 8 இடங்களில் நகரும் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில், விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×