search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி நம்பெருமாள் ஹம்சவாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.
    X
    ஸ்ரீரங்கம் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி நம்பெருமாள் ஹம்சவாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாள் திருவிழாவான நேற்று ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வாகன மண்டபம் சென்றடைந்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. இத்திருவிழா வருகிற 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு ரெங்க விலாஸ் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    முதல் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வாகன மண்டபம் சென்றடைந்தார். பின்னர் 8.30 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.



    இன்று(புதன்கிழமை) ஹனுமந்த வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) கற்பகவிருட்ச வாகனத்திலும், 3-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 4-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 5-ந் தேதி யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி வீதியுலா வருகிறார். விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 7-ந் தேதி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் இரவு 7.30 மணி முதல் 9 மணிவரை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 8-ந் தேதி பந்த காட்சி நடைபெறும். அன்றைய தினம் காலை 9.15 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
    Next Story
    ×