search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது

    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு மாசி திருவிழா வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 2-ம் திருநாள் காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் வீதி உலா வருகிறார்கள்.

    3-ம் திருநாள் காலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி பூங்கோயில் சப்பரத்திலும், அம்பாள் கேடய சப்பரத்திலும், மாலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துகிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வருகிறார்கள். 4-ம் திருநாள் காலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும், மாலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா வருகிறார்கள்.

    5-ம் திருநாளான 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்கிறார்கள். மாலையில் சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி, சுவாமி- அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.



    6-ம் திருநாள் காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வருகிறார். இரவில் மேல கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்கிறார்கள். 7-ம் திருநாளான 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார்.

    8-ம் திருநாளான 8-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேல கோவில் சேர்கிறார்கள்.

    9-ம் திருநாளான 9-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் பல்லக்கில் வீதி உலா வந்து, மேல கோவில் சேர்கிறார்கள். இரவில் மேல கோவிலில் இருந்து சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வருகிறார்கள். 10-ம் திருநாளான 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரத வீதிகளில் பவனி வருகிறார்கள்.

    11-ம் திருநாளான 11-ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக தெப்பக்குள மண்டபம் சேர்கிறார்கள். இரவில் அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி- அம்பாள் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி- அம்பாள் 8 வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவில் சுவாமி- அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

    விழா நாட்களில் தினமும் கோவில் வளாகத்தில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், திருமுறை இன்னிசை, கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×