search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாசிவராத்திரியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை அமர்வு தரிசனம் ரத்து
    X

    மகாசிவராத்திரியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை அமர்வு தரிசனம் ரத்து

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகாசிவராத்திரியையொட்டி பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய வசதியாக நாளை அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மகா சிவராத்திரி விழாவும் ஒன்று. இந்தாண்டு மகாசிவராத்திரி விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை பக்தர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றியும் வழிபடுவர். இந்த நிலையில் சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக லட்ச தீபங்கள் ஏற்றுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    லட்சதீபங்களை கிளிக்கோபுரத்திற்கு வெளியே மட்டும் ஏற்ற வேண்டும் என்றும் பக்தர்கள் 2-ம் பிரகாரத்தில் வலம் வருவதற்கு பதிலாக 3-ம் பிரகாரத்தில் வலம் வர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



    அதேபோல் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையை ராஜகோபுரத்தில் இருந்து அனுமதிக்கவும், முக்கிய பிரமுகர்களை மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியன்று அதிகாலை 3 மணிக்கு சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேம் நடைபெறும். தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். மதியம் 12 மணியளவில் சாமி, அம்மனுக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பின்னர் இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும், இரவு 9 மணி முதல் கால பூஜையும், இரவு 11 மணிக்கு 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறும். தொடர்ந்து லிங்கோத்பவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

    மகா சிவராத்திரியையொட்டி கோவில் கலையரங்கத்தில் மாலை 6 மணி முதல் விடிய, விடிய தேவார பாடல்கள், இன்னிசை, பரதநாட்டியம் மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரே 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சிக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரியையொட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர்.
    Next Story
    ×