search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவ நாச்சியார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய காட்சி
    X
    உறையூர் நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவ நாச்சியார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய காட்சி

    உறையூர் நாச்சியார் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

    திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் ஸ்ரீகமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை நடைபெற்ற பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் மூலஸ்தானத்தில் திருமொழி பாசுரங்கள் பாடப்பட்டன. இரவில் அரையர்கள் ஸ்ரீ சடகோபம் சாதிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று நடந்தது.

    இதனை முன்னிட்டு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு திருச்சுற்று வலம் வந்து பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள பரமபத வாசல் என்கிற சொர்க்க வாசல் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு வேத விண்ணப்பம் கேட்டபின் மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக உற்சவ நாச்சியார் வெளியே வந்து திருவாய்மொழி மண்டபம் வந்தடைந்தார். அப்போது சொர்க்க வாசல் முன்பு நின்று கொண்டிருந்த திரளான பக்தர்கள், உற்சவ நாச்சியாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.


    சிறப்பு அலங்காரத்தில் உற்சவ நாச்சியார்.

    இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார், ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். பின்னர் நாச்சியார் இரவு 8.45 மணிக்கு கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை, வாத்தியத்துடன் மூலஸ்தானம் இரவு 9.30 மணிக்கு சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாச்சியாரை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மாலையில் நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி சொர்க்க வாசலை கடந்து செல்கிறார். அன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்தில் வைத்து உற்சவ நாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுகிறார். 27-ந்தேதி காலை 9.30 மணிக்கு கோவிலில் இயற்பா சாற்று முறை நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×