search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெப்பத்திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்ட காட்சி.
    X
    தெப்பத்திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்ட காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழாவையொட்டி நேற்று காலை 9.30 மணியளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தெப்பத்திருவிழாவையொட்டி நேற்று காலை 9.30 மணியளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது. முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் முகூர்த்தக்காலை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் நட்டனர்.

    வருகிற 28-ந் தேதி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு ரெங்கவிலாச ஆஸ்தான மண்டபத்தை சேருகிறார். அங்கு மாலை 6.30 மணிக்கு ஹம்சவாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வாகன மண்டபம் சேருவார். பின்னர் வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். இதேபோன்று மார்ச் 1 மற்றும் 2-ந் தேதிகளில் ரெங்கவிலாச மண்டபம் வந்து அங்கிருந்து வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

    மார்ச் 3-ந் தேதி வெள்ளி கருடசேவை, 4-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 5-ந் தேதி யானை வாகனத்திலும் வீதியுலாநடைபெற உள்ளது. 6-ந் தேதி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி உள்வீதிவலம் வருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா மார்ச் 7-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து உப நாச்சியார்களுடன் புறப்பட்டு 5 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். அதன் பின் 7.15 மணிக்கு ஆஸ்தானமண்டபத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணிமுதல் இரவு 9 மணி வரை தெப்ப ஓட்டம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 9.15 மணிக்குபுறப்பட்டு 11.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைகிறார். மார்ச் 8-ந் தேதி பந்தகாட்சி நடைபெறுகிறது.

    அன்றையதினம் காலை 9.15 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மதியம் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு ஒற்றை பிரபையில் நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    தெப்பத்திருவிழாவையொட்டி 28-ந் தேதிமுதல் அடுத்தமாதம் 8-ந் தேதிவரை இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தானசேவைகிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×