search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா 28-ந்தேதி தொடக்கம்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா 28-ந்தேதி தொடக்கம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது. முகூர்த்தக்கால் நாளை (வெள்ளிக்கிழமை) நடப்படுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை(வெள்ளிக்கிழமை) கோவிலில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 28-ந்தேதி முதல் நாள் விழாவில், மாலை 6.30 மணி அளவில் நம்பெருமாள் ஹம்சவாகனத்தில் புறப்பட்டு உள் வீதிகளில் வலம் வந்து வாகன மண்டபம் சென்றடைகிறார். வருகிற 1-ந்தேதி ஹனுமந்த வாகனத்திலும், 2-ந்தேதி கற்பக விருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் உலா வருகிறார். விழாவின் 4-ம் நாளான வருகிற 3-ந்தேதி மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பம் ஓட்டம் 7-ந்தேதி மேலவாசலில் உள்ள தெப்பகுளத்தில் இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது. 8-ந்தேதி பந்த காட்சி நடைபெறும். அன்றைய தினம் காலை 9.15 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு ஒற்றைபிரபையில் நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். தெப்பத்திருவிழாவையொட்டி 28-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை இரவு 8.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×