search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகனுக்கு தண்டாயுதபாணி என்று பெயர் வரக்காரணம்
    X

    முருகனுக்கு தண்டாயுதபாணி என்று பெயர் வரக்காரணம்

    பழனி அறுபடை வீடுகளில் பழமையானது. இங்கு முருகப் பெருமான் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிக்கிறான். இதன் வரலாற்றை பார்க்கலாம்.
    காவடியாட்டம் என்றதும் நமக்கு பழனி தான் நினைவுக்கு வரும். பழனி தலம் தனித்துவம் கொண்டது. பழனி அறுபடை வீடுகளில் பழமையானது. இங்கு முருகப் பெருமான் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிக்கிறான். அதனால் முருகனுக்கு தண்டாயுதபாணி என்ற பெயர் வந்தது. இது தொடர்பான தலவரலாறு:-

    கலகத்திற்கு பெயர் போன நாரதர், யாருக்கும் கிடைக்காத அரிய மாம்பழத்தை (சில குறிப்புகளில் மாதுளம் பழம் என்கிறார்கள்) சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். அவரை பார்த்து சிவபெருமான், ‘என்ன நாரதா கலகமூட்ட உனக்கு இன்று வேறு இடம் கிடைக்க வில்லையா?’ என்றார்.

    பிறகு பார்வதியிடம் பழத்தை கொடுத்து சாப்பிட சொன்னார். அவர் மறுத்த நிலையில் விநாயகரும், முருகப் பெருமானும் அங்கு வந்தனர். ‘பழம் எனக்குத் தான் வேண்டும்’ என்று கேட்டனர். அம்மா நான் தான் மூத்த செல்லப்பிள்ளை. எனக்கே பழத்தைத் தாருங்கள் என்றார் முருகப் பெருமான்.

    உடனே பார்வதி, ‘சரி, சரி.... சண்டை போடாதீர்கள் பழத்தை ஆளுக்குப் பாதியாக தருகிறேன்’ என் றார். இதை சிவபெருமான் ஏற்கவில்லை. ‘இந்த பழம் சக்தி வாய்ந்தது. அதை வெட்டக் கூடாது. முழுதாக உண்ண வேண்டும். என்ன நாரதா அப்படித் தானே’ என்றார்.

    அதற்கு நாரதர் ‘‘ஆமாம் சாமி’ என்றார். ‘பழத்தை இருவரும் கேட்கிறார்களே... என்ன செய்வது?’ என்றார் பார்வதி.

    ‘அப்படிக் கேள், சொல்கிறேன்’ என்ற சிவபெருமான் ‘விநாயகா, குமரா... உங்களில் இந்த உலகை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ.... அவர்களுக்குத் தான் இந்த ஞானப்பழம்’ என்றார். மறு வினாடி, ‘உலகத்தைத் தானே... இதோ ஒரு நொடியில் சுற்றி வருகிறேன்’ என்று முருகப் பெருமான் புறப்பட்டார். தனது வாகனமான மயில் மீது ஏறி விர்ரென பறந்தார்.

    ஆனால் பதற்றமின்றி நின்ற விநாயகர் நாரதரைப் பார்த்து, ‘உலகம் என்றால் என்ன? அப்பன், அம்மை என்றால் என்ன?’ என்று கேள்வி கேட்டார்.
    இதைத் தான் எதிர்பார்த்திருந்து காத்திருந்த நாரதர் மகிழ்ச்சி அடைந்தார். ‘உலகம் என்றால் அம்மை அப்பன். அம்மை-அப்பன் என்றால் உலகம் என்று அர்த்தம்’ என்றார்.

    ‘நன்றாக சொன்னீர், அப்படியானால் என் தாய், தந்தையை சுற்று வந்தால், இந்த உலகை சுற்றியதாக தானே அர்த்தம்?’ என்று விநாயகர் கேட்டார். அதற்கு நாரதர், ‘ஆமாம் அதில் என்ன சந்தேகம்’ என்றார்.

    இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த விநாயகர் சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்தார். அவருக்கு சிவபெருமான் பழத்தை வழங்கி ஆசீர் வதித்தார். அந்த சமயத்தில் உலகை சுற்றி முடித்து விட்டு முருகப் பெருமான் வந்து இறங்கினார். விநாயகர் கையில் பழம் இருப்பத்தைப் பார்த்ததும் முருகர் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பார்வதியைப் பார்த்து, ‘தாயே என்ன இது?’ என்று சத்தமாக கேட்டார்.

    பயந்து போன பார்வதி, ‘எனக்கும் ஒன்றும் புரிய வில்லையப்பா... தாய், தந்தையை சுற்றி வந்தால், உலகைச் சுற்றியதாக அர்த்தமா என்று கணபதி கேட்டான். நாரதரும் அதற்கு ஒத்துக் கொண்டார். அவனும் எங்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டான்’ என்றார். இதை கேட்டதும் முருகனின் கோபம் அதிகமாயிற்று. ஓகோ, பெரியவர்களாக சேர்ந்து நடத்திய நாடகமா? நன்றாக இருக்கிறது. இச்சிறு பழவிஷயத்தில் உங்கள் குணத்தைக் காட்டியதற்கு நன்றி. நான் வருகிறேன்’ என்று புறப்பட்டார்.

    கோபம் தணியாத முருகப் பெருமான் உடைகளைத் துறந்து, ஒரு முழங் கோவணத்துடன் குன்றின் மீது வந்தமர்ந்தார். முருகன் வந்து அமர்ந்து இடம் தான் பழனி என கூறப்படுகிறது. முருகனே ஞானப்பழம். மாம்பழம் கிடைக்காமல், அவன் வந்து அமர்ந்து இடம் இது. முருகனைச் சமாதானப்படுத்த முயன்ற பார்வதி.

    முருகா நீயே ஞானப்பழம் உனக்கெதற்கு பழம். பழத்தின் காரணமாக, பழமான நீ வந்த அமர்ந்த இடம் இனி பழம் நீ என அழைக்கப்படும் என அருளினார். பழம் நீ என்பது தான் மருவி பழனி (பழனி) என்றாகி விட்டது. மேலும் முருகன் கோபம் கொண்டு குன்றின் மீது அமர்ந்ததால் இனி குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என பார்வதி கூறினாள். இன்றும் குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனை காணலாம்.
    Next Story
    ×