search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்த போது எடுத்த படம்.
    X
    ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்த போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது. இது குறித்த விரிவான செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்டஏகாதசி விழா கடந்த டிசம்பர் 29-ந் தேதி பகல்பத்து உற்சவம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அன்றுமுதல் ராப்பத்து உற்சவம் தொடங்கியது. திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி கடந்த 15-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்றுமுன்தினம் (17-ந் தேதி) நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ் வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது. நம்மாழ்வார் பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் வெள்ளை உடை உடுத்தி பன்னிருநாமமும், துளசி மாலையும் தரிசித்து காட்சியளித்தார்.

    அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை உச்சரித்தவாறு நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை காண்பித்து நம்மாழ்வார் மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர்.

    அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூர்ி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. அதன் பின் காலை 8 மணிமுதல் 9.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தொடர்ந்து நம்பெருமாள் காலை 10 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அதன்பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதன்பின் அதிகாலை 4 மணி மணிக்கு சாற்றமறை நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.
    Next Story
    ×