search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மாயி அழைக்கும் திருவிழாவையொட்டி வரதராஜபுரம் காவிரி ஆற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கும்மியடித்த காட்சி.
    X
    அம்மாயி அழைக்கும் திருவிழாவையொட்டி வரதராஜபுரம் காவிரி ஆற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கும்மியடித்த காட்சி.

    தொட்டியம் அருகே அம்மாயி அழைக்கும் திருவிழா

    காணும் பொங்கலையொட்டி தொட்டியம் அருகே அம்மாயி அழைக்கும் திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கும்மியடித்து கொண்டாடினர்.
    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளது, வரதராஜபுரம் கிராமம். காவிரி ஆற்றை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி அம்மாயி அழைக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் இந்த திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவையொட்டி தை மாதம் 1-ந் தேதி பொங்கலன்று ஊரில் உள்ள சுமார் 10 வயதுக்குட்பட்ட 3 பெண் குழந்தைகளை ஊர் பொதுமக்கள் தேர்ந்தெடுத்து விரதம் இருக்க செய்தனர். காணும் பொங்கலான நேற்று மாலை அந்த 3 பெண் குழந்தைகளையும் குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு மேளதாளத்துடன் அழைத்து சென்றனர்.

    காவிரியாற்றின் நடுவில் ஒரு மணல் திட்டில் அனைவரும் அமர்ந்து மணலில் தாத்தா-அம்மாயி(பாட்டி) போன்ற மண் சிற்பங்களால் ஆன 2 உருவங்களை வைத்து அதற்கு முன்பு 3 பெண் குழந்தைகளை அமர வைத்து அவர்களுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த சுமங்கலி பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை அந்த மணல் சிற்பங்களுக்கு அணிவித்து தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரி, பொரிகடலை, துள்ளுமாவு, தேங்காய், வாழைப்பழம், சூடம், சாம்பிராணி வைத்து பூஜை செய்தனர்.

    பின்னர் 3 பெண் குழந்தைகளையும் சுற்றி நின்று கும்மியடித்து பாட்டு பாடி குதூகலத்துடன் கொண்டாடினர். சுமங்கலி பெண்கள் தங்களுடைய தாலி பாக்கியம் நிலைத்து இருக்கவும், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடக்கவும் வேண்டிக்கொண்டனர்.

    அப்போது 3 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அருள் வந்து ஊரை காப்பது உறுதி என்று குங்கும பொட்டலத்தை எடுத்து பூசாரி கையில் கொடுத்தார். இதைக்கண்ட ஊர் பொதுமக்கள் மெய்சிலிர்த்தனர். பின்னர் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த கலப்பு சாப்பாடான புளியோதரை, தயிர்சாதம், தக்காளி சாதம் ஆகியவற்றை அனைவரும் பகிர்ந்து உண்டனர்.

    விழாவில் தொட்டியம், மகேந்திரமங்கலம், சீனிவாசநல்லூர், மணமேடு, முசிறி உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×