search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் காட்சி அளிக்கும் அற்புத கோவில்
    X

    மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் காட்சி அளிக்கும் அற்புத கோவில்

    தாணுமாலயன் கோவில் தாணு என்பது சிவபெருமானையும், மால் என்பது திருமாலையும், அயன் என்பது பிரமனையும் குறிப்பிடுவது ஆகும்.
    தமிழகத்தின் தென்கோடியில் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழியில் பழையாற்றின் கரை அருகே இயற்கை எழில்சூழ, நெடிதுயர்த்த கோபுரக் காட்சியுடன் தாணுமாலயன் கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது.

    தாணு என்பது சிவபெருமானையும், மால் என்பது திருமாலையும், அயன் என்பது பிரமனையும் குறிப்பிடுவது ஆகும். இந்த ஸ்தலத்திற்கு வீரகேரள சதுர்வேதிமங்கலம் ராஜராஜ வளநாட்டுத் திருச்சி வந்திபுரம், நாஞ்சி நாட்டு சிவந்திரம் என்ற பெயர்களும் பெருமை தருவதாக உள்ளது. இந்திரன் தனது சாப விமோசனம் பெற்றதும் இந்த ஸ்தலத்தில் தான்.

    அத்திரி முனிவருக்கும், அவரது துணைவி ஆனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

    இந்திரன் தான் அடைந்த சாப விமோசனம் பெற்றதினால், அவனே அர்த்த சாம பூஜை செய்து வருவதாக ஐதீகம். இந்த கோவிலின் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டதும் 134½ அடி உயரமுள்ளதாகும். கோபுரத் தில் உள்ள 7 நிலைகளிலும் பச்சிலை மருந்துகளால் ஸ்தல புராணமும், கோவில் ஸ்தல வரலாறும் வரையப்பட்டுள்ளது. கோவிலுக்குள் ஏராளமான கலை அழகு நிறைந்த சிற்பங்கள், தூண்கள் கல் மண்டபங்கள், இசைத் தூண்கள் உள்ளன.

    சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த செண்பகராமன் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், குலசேகர மண்டபம், வசந்த மண்டபம், அலங்கார மண்டபம் 12 ராசிகளையும் பூமியைப் பார்த்து தலைகீழாக அமைந்துள்ள நவக்கிரக மண்டபம், சித்திரசபை ஆகியவைகள் கலைச்சிறப்பு மிக்கவை யாகும். ஒரே கல்லில் 18 அடி உயரத்தில் சீதாராமன் சன்னதிக்கு எதிரே கம்பீரமாக விஸ்வரூப கோலத்தில் காட்சி தரும் ராமபக்த அனுமன், வேறு எங்கும் காண முடியாத கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் உள்ள நூற்றுக்கணக்கான கல் வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன.

    குமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் முதன்மைக்கோவிலாக சுசீந்திரம் கோவில் சிறப்பு பெற்று வருகிறது. நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வரும்பொழுது தேவசம் தலைமையிடம் மட்டும் சுசீந்திரத்தில் இயங்கி வருவதிலிருந்து தாணுமாலயன் கோவிலின் பெருமையை உணர முடியும். கி.பி.1410-ம் ஆண்டில் சேர மன்னர் “ ஸ்ரீஉதயமார்த் தாண்ட வர்மா” வினால் அலங்கார மண்டபமும், இசைத் தூண்களும் அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளன. இந்த கோவிலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்த பின்பு முன்புபோல் ஆகம விதிப்படி பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.
    Next Story
    ×