search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா 6-ந்தேதி தொடங்குகிறது
    X

    பழனி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா 6-ந்தேதி தொடங்குகிறது

    பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் திருக் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 6-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    அன்றைய தினம் மாலையில், சாயரட்சை பூஜையில் காப்புகட்டு நடைபெறுகிறது. 7 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முதல் நாள் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனையும், 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனையும், 6.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

    பின்னர் 2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் வரை மாலையில் நடக்கும் சாயரட்சை பூஜையின் போது சிறப்பு வழிபாடு, பூஜைகளும் நடைபெறுகிறது. 6-ம் திருநாளில் நடக்கும் சாயரட்சை பூஜையின் போது, யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    பின்னர் 7-ம் திருநாளான வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) திருக்கார்த்திகையாகும். அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறப்பும், உடன் விஸ்வரூபதரிசனமும், நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின்னர் சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது. இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திக்குகளிலும் தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் முன்புறம் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், திருஆவினன் குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் திருக் கார்த்திகை தீபம் ஏற்றி சொக் கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருக்கார்த்திகை தீப திருவிழா தினமான 12-ந் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடப்பதால், இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×