search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யும் முறை
    X

    ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யும் முறை

    சபரிமலை கோவில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யும் முறையை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டவர்கள், அதிகாலை பஸ்மகுளத்தில் குளித்து விட்டு உள்கால் சட்டை துண்டு அணிந்து கொண்டு ஐயப்பனின் சன்னதி கொடிமரத்தில் ஆரம்பித்து உருண்டு வந்து கொடிமரத்தை மீண்டும் அடைந்ததும் ஐயப்பனை வணங்கி தங்குமிடம் செல்ல வேண்டும். அங்கப்பிரதட்சணம் செய்தவர் வேண்டிக் கொண்டது நடக்கும்.

    சபரிபீடத்தில் தவம் செய்து, தனது ஆசை நிறைவேறாததால், தவசியும் கன்னியுமான சபரி அக்னியில் குதித்து சுத்தம் செய்து இறைவனடி சேர்ந்தாள். சாஸ்தா, சபரியின் பஸ்பத்தை எடுத்து ஒரு பள்ளத்தில் போட்டார்.

    இந்த பள்ளம் காலப்போக்கில் குளமாக மாறியது. இந்த குளத்தில் குளிப்பவர்களுக்கு புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. ஆககே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பஸ்மகுளத்தில் இறங்கி நீராடுகிறார்கள்.

    உரல்குழி தீர்த்தம் எனப்படுவது ஒரு சிறிய அருவி விழுகிற இடமாகும். இது புல்மேடு போகும் வழியில் புல்மேடு பாதை பிரியும் இடத்தில் இருக்கிறது. தனியாகக் காட்டில் அரை கிலோ மீட்டர் தூரம் போக வேண்டும்.

    அருவியிலிருந்து விழுகிற தண்ணீர் உரல்குழி போல உள்ள பள்ளத்தில் விழுந்து ஓடுகின்றது. இந்த பள்ளத்தில் பக்தர் ஒருவர் வீதம் உட்கார்ந்து குளிக்கின்றனர். இந்த உரல் குழி தீர்த்தம் விநாயகரால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். இந்த உரல்குழி தீர்த்தத்தில் நீராடினால் தீராத சரும நோய், நொடிகள் தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகின்றது.

    கல்லாறு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னதிக்கு நேர் எதிரே காட்டினுள் சுமார் நான்கு கி.மீ. தூரத்தில் உள்ளது. அற்புதமான மலை மூலிகைகள் கலந்து வரும் கல்லாறு புனிதமானது. இங்கே நீராடச் செல்பவர்கள் கூட்டமாகத்தான் செல்ல வேண்டும். மிருகங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இங்கே பாதுகாப்போடுதான் செல்ல வேண்டும்.

    நெய் அபிஷேகம் செய்கிறவர், நெய் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஐயப்பனின் சன்னிதானம் வலது பக்கம் உள்ள அதற்கான அலுவலகத்தில் நெய் பாத்திரத்தைக் கொடுக்க வேண்டும். பிறகு திருக்கோவிலின் இடதுபுறம் வந்து தனது அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் கொடுத்த நெய்யில் பாதிதான் கிடைக்கும். இந்த நெய்யைப் பிறகு குருசாமி, எல்லாச்சாமிகளுக்கும் பிரித்துத் தனித்தனி டப்பாவில் போட்டுக் கொடுப்பார்.

    இப்படி நெய் அபிஷேகம் செய்வதற்கு முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். எங்கே தெரியுமா? மஞ்சமாதா கோவிலின் எதிரில் (கீழே) தேவஸ்தான போர்டு தனி அறை வைத்து செயல்படுகின்றது. அங்கே போய், ஒரு இருமுடிக்கு ரூபாய் மூன்று வீதம் ஒரே நபர் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

    இந்த நெய் அபிஷேக டிக்கெட் காலை முதல் இரவு வரை தரப்படுகிறது. சபரிமலையில் ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை நடத்தப்படுகிறது. அர்ச்சனை செய்ய விரும்புவோர் அர்ச்சனைச் சீட்டு ஆபீஸ் கவுண்டரில் பெற்று சீட்டின் பின் பக்கத்தில் உங்கள் பெயர், நட்சத்திரம் முதலியவற்றை ஆங்கிலத்தில் எழுதி, சன்னதியிலிருக்கும் அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம் கொடுப்பார்.

    வீபதி, குங்குமம் முதலியன தனியாகவும் கிடைக்கும். சன்னிதானம் அருகில் உள்ள ஆபீஸ் கவுண்டர்களில் விபூதி, குங்குமம், ஐயப்பன் தகடு போன்றவை விற்கப்படுகிறது.

    நெய் அபிஷேகம் (நேரம்) முடிந்து விட்டபின் நமது நெய்யை அவசரமாக அபிஷேகம் செய்து விட்டு ஊர் திரும்ப எண்ணுபவர்கள் கவலைப்பட வேண்டாம். இவர்களுக்காகக் கோவில் சன்னிதான மூலையில் (ஆபீஸ் ஒரமாக) நெய் தோணி உள்ளது. இதில் தேங்காய் உடைத்து, நெய் தோணியில் நெய்யை ஊற்றி விட்டால் அந்த நெய் கோவிலின் அபிஷேக நெய்யுடன் சேர்ந்து விடும்.

    உங்களுக்கு அபிஷேக நெய் தனியாக வேண்டியிருந்தால் மஞ்சமாதா கோவிலுக்கு போகும் வழியில் தேவஸ்தான அலுவலர் டப்பாவில் அடைத்து அபிஷேகம் செய்த நெய்யை விற்கிறார்கள். விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×