search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி கொலு படிகள் கூறும் தத்துவம்
    X

    நவராத்திரி கொலு படிகள் கூறும் தத்துவம்

    நவராத்திரிக்கு வைக்கும் கொலு பொம்மைகளின் 9 படிகள் கூறும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.
    ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் எனது உருவத்தை செய்து, என்னை பூஜித்து வந்தால் அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று அம்பிகை கூறியிருப்பதாக தேவி புராணம் தெரிவிக்கிறது.

    சுரதா என்ற மன்னன் தனது நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவனது நாட்டைப் பிடிக்க சிலர் சதி செய்தனர். இதை அறிந்த மன்னன், எதிரிகளை அழிப்பதற்காக, தன் குருவான சுதாமாவிடம் ஆலோசனைக் கேட்டான்.

    அவரோ தேவி புராணத்தில் அம்பிகை கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, தூய்மையான களிமண்ணைக் கொண்டு காளியின் சொரூபத்தை செய்து, நோன்பு இருந்து அன்னையை வழிபட்டால் உன்னுடைய எண்ணம் நிறைவேறும் என்று அருளினார்.

    மன்னனும், குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினான். பகைவர்களை வீழ்த்தி, அவர்களின் இன்னல்களில் இருந்து விடுபட்டான்.

    அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரி விழாவின் முக்கிய அங்கமாக உள்ளது.

    மனிதன் படிப்படியாக ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலு படிகளும், பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.

    முதலாம் படி :

    கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

    இரண்டாம் படி :

    அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.

    மூன்றாம் படி :

    மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.

    நாலாம் படி :

    நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.

    ஐந்தாம் படி :

    ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.

    ஆறாம் படி : 

    இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.

    ஏழாம் படி :

    மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.

    எட்டாம் படி :

    தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஒன்பதாம் படி :

    பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.

    மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம். 
    Next Story
    ×