search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெய்வ உருவங்களாகக் காட்சிக் கொடுத்த சீரடி சாய்பாபா
    X

    தெய்வ உருவங்களாகக் காட்சிக் கொடுத்த சீரடி சாய்பாபா

    சீரடி சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    நான் பராசக்தி. ஆதிசக்தி என்பதும் நானே. படைப்பதற்கும், அழிப்பதற்கும் நானே முதல் வினை செய்கிறேன். இந்த பிரபஞ்சத்தின் தாயாகவும், பிரமனாகவும் என்னைப் புரிந்து கொண்டவர்கள் முழு அமைதியையும் அதோடு முக்தியையும் பெறுகிறார்கள் என்று சீரடி சாய்பாபா தன்னைப் பற்றி கூறுகையில் குறிப்பிட்டார். 

    மற்றொரு தடவை அவர் தன்னைப் பற்றி கூறுகையில், ‘‘என்னை உண்மையான மனக்கிளர்ச்சியுடன் வழிபடுபவர்களுக்கு என்னை நான் புலப்படுத்துவேன், வெளிப்படுத்துவேன். என்னுடைய தூல சரீரத்தை அவர்களுக்குக் காட்டுவதோடு, ஆன்மிகத்தில் உச்சத்துக்கு அவர்களைக் கொண்டு செல்வேன்’’ என்றார். 

    இப்படி சொன்னதை உறுதிபடுத்துவம் வகையில் பாபா தமது பக்தர்கள் பலருக்கும் அவர்கள் விரும்பும் இறை வடிவத்தில் காட்சி கொடுத்து அதிசயிக்க வைத்தார். நூற்றுக்கணக்கானவர்கள் சீரடி சாய்பாபாவை தம் குலதெய்வம் வடிவத்தில் கண்டு மெய் சிலிர்த்துள்ளனர். 

    ஆனால் சிலர் மட்டுமே அந்த அற்புதத்தை பதிவு செய்தனர். இதன் மூலம் ஒவ்வொரு உயிரும் தமது பேரொளியின் சிறு துளி என்பதை பாபா உலகிற்கு உணர்த்தினார். 

    அனைத்து வகை உயிரினங்களாகவும், பஞ்சபூதங்களாகவும் தம்மை வெளிப்படுத்திய பாபா கடவுள் அவதாரங்களின் வடிவத்தை வெளிப்படுத்திய போது பக்தர்கள் கண்ணீர் விட்டு, கதறி அவர் காலடியில் சரண் அடைந்தனர். உலகில் எந்த மகானும் இப்படி தம்மை இறை உருவங்களாக பலதடவை வெளிப்படுத்தியதே இல்லை. எனவேதான் அவரது அற்புதம் இன்றும் வியந்து பார்க்கப்படுகிறது. அந்த அற்புதங்களில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். 

    பாபாவின் பக்தர்களில் ஒருவரான மம்லத்தார் என்பவர் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தார். அவர் ஒரு தடவை பாபாவை பார்ப்பதற்காக சீரடி வந்தார். அவர் தன்னுடன் தனது டாக்டர் நண்பரையும் அழைத்துச் சென்றிருந்தார். 

    சீரடிக்கு சென்றதும் மம்லத்தார் மசூதிக்குள் சென்று பாபாவை வழிபட்டார். அவரது டாக்டர் நண்பர், ‘‘நான் ராம பக்தன். எனவே மசூதிக்குள் வரமாட்டேன். வெளியிலேயே இருக்கிறேன்’’ என்று கூறி நின்று விட்டார். 

    சிறிது நேரம் கழித்து தற்செயலாக டாக்டர் மசூதிக்குள் பார்த்தார். உள்ளே சாய்பாபா, ஸ்ரீராமனாக காட்சி அளித்தார். ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்த டாக்டர் ‘‘ராம்... ராம்....’’ என்று உணர்ச்சிப் பொங்க கூறியபடி மசூதிக்குள் வந்து பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

    இதைக் கண்ட மம்லத்தார் ஆச்சரியம் அடைந்தார். டாக்டரிடம் அவர், ‘‘என்ன நடந்தது?’’ என்று கேட்டார். அதற்கு டாக்டர், ‘‘நான் என் குடும்ப தெய்வமான ராமனை பாபாவிடம் கண்டேன்’’ என்று கண்ணீர் மல்க கூறினார். 

    பிறகு மீண்டும் பாபா என்னை அழைத்து ஆசி தரும் வரை நான் சீரடியை விட்டு வர மாட்டேன் என்று அங்கேயே தங்கி விட்டார். 3 நாட்களாக டாக்டர் சீரடியில் தங்கி இருந்தார். 

    அப்போது டாக்டருக்கு அறிமுகமான காண்டேஷ் என்ற ஊரில் இருந்து ஒருவர் சீரடி வந்திருந்தார். அவர் பாபாவை கண்டு தரிசனம் செய்த போது பாபா அவரிடம், ‘‘உனக்கு தெரிந்த டாக்டர் ஒருவர் வந்திருக்கிறார் அல்லவா, அவரை உள்ளே அழைத்து வா’’ என்றார். 
    அதன்படி டாக்டர் மசூதிக்குள் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பாபா மீண்டும் ஆசி வழங்கினார். இதன் மூலம் அந்த டாக்டர் பிரம்மானந்த அனுபவத்தைப் பெற்றார். 

    அதன்பிறகு டாக்டர் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். அடுத்த 15 நாட்கள் அவர் பாபாவை ராமபிரானாக கனவில் கண்டு மகிழ்ந்தார். 
    சென்னையைச் சேர்ந்த பஜனைக் கோஷ்டி ஒன்றுக்கும் பாபாவை ராமபிரானாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பஜனைக் கோஷ்டியில் 4 பேர் இருந்தனர். சீரடியில் பாபா முன்பு பாடினால் நிறைய பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அவர்கள் சென்றிருந்தனர்.

    பாபா முன்பு அந்த பஜனைக் கோஷ்டி பாடியது. அப்போது பஜனைக் குழுவின் 4 பேரில் ஒரு பெண்ணுக்கு மட்டும் பாபா மீது பக்தி ஏற்பட்டது. மற்ற மூவரும் பணத்தை குறி வைத்து பாட, அந்த பெண் மட்டும் பாபாவை பக்தியோடு பார்த்தாள். அதனால் அவளது கண்களுக்கு பாபா, ஸ்ரீராமனாகக் காட்சிக் கொடுத்தார். அதைக் கண்டு அவள் கண்ணீர் மல்க தன் நிலை மறந்தாள். பாபாவின் பக்தைகளில் ஒருவர், நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தாள். பாபாவை தரிசனம் செய்தால் தன் நோய் தீரும் என்று அவள் மிகுந்த நம்பிக்கையுடன் சீரடிக்கு வந்தாள். 

    அவளைப் பார்த்ததும், ‘‘உன்னை எனக்கு ரொம்ப நாளாகத் தெரியும். நீ என்னைத்தானே தினமும் வழிபடுகிறாய்’’ என்று பாபா கூறினார். 
    அதைக் கேட்டு அந்த பெண் குழப்பம் அடைந்தாள். அவள் பாபாவிடம், ‘‘நான் இப்போதுதான் முதல்முறையாக சீரடி வந்துள்ளேன்’’ என்றாள். 

    அதற்கு பாபா, ‘‘நீ தினமும் யாரை பூஜை செய்து வணங்குவாய்’’ என்றார். உடனே அந்த பெண், ‘‘விநாயகரைத்தான் வழிபடுகிறேன்’’ என்றாள். தன் தாய் வீட்டிலும் விநாயகர் வழிபாடே நடப்பதாகவும் கூறினாள். இதையடுத்து பாபா அவளிடம், ‘‘நீ சிறு வயதில் இருந்து விநாயகருக்கு படைக்கும் நைவேத்தியம் எல்லாம் என்னிடம்தான் வந்து சேர்கிறது’’ என்றார். அந்த பெண்ணுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. 

    பாபாவை பணிந்து வணங்கி விட்டு நிமிர்ந்து பார்த்தாள். அங்கு பாபா, விநாயகராக காட்சி கொடுத்தார். அதை பார்த்து அந்த பெண் ஆச்சரியத்தில் இருந்து மீள நீண்ட நேரமானது. சீரடி மக்கள் சிவபெருமானை கண்டோபா என்ற பெயரில் வழிபட்டு வருகிறார்கள். அந்த, கண்டோபாவாக சாய்பாபா பல தடவை பலருக்கு காட்சி கொடுத்துள்ளார். 

    மகல்சாபதி எனும் முதன்மை சீடருக்குஅவர் ஒரு தடவை கண்டோபாவாக காட்சிக் கொடுத்தார். அதன் பிறகே பாபாவுக்கு தினமும் ஆரத்தி எடுக்கும் வழக்கத்தை மகல்சாபதி தொடங்கினார். அது போல மற்றொரு நாள் மகல்சாபதியின் மகன் மார்த்தாண்ட் கண் எதிரிலேயே கண்டோபா சிலைக்குள் பாபா மறைந்தார். பிறகு சிலையில் இருந்து வெளியில் வந்தார். மார்த்தாண்ட் இதை ஊருக்குள் சென்று சொன்ன போது சீரடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    1913&ம் ஆண்டு ரகுவீர் புரந்தரே என்பவரும், அவரது தாயும் சீரடி வந்தனர். பாபாவை தரிசனம் செய்த பிறகு பண்டரிபுரம் சென்று விட்டல் எனும் பாண்டுரங்கனை தரிசனம் செய்ய நினைத்தனர். இதை அறிந்த பாபா அவர்கள் இருவரையும் அழைத்தார். பிறகு திடீரென பெரிய செங்கல் மீது நின்ற கோலத்தில் பாண்டுரங்கனாக மாறி பாபா காட்சி கொடுத்தார்.

    ரகுவீர் புரந்தரேயும் அவரது தாயாரும் கண்ணீர் மல்க பாபாவை வழிபட்டனர். ‘‘நீரே விட்டல்....’’ என்ற அவர்கள் பண்டரிபுரத்துக்கு செல்லும் பயணத் திட்டத்தையே கைவிட்டனர். மும்பையை சேர்ந்த பிரதான் என்பவர் பாபாவின் தீவிர பக்தர். அவர் பாபாவை வழிபடும் விதம் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மாதவபட் என்பவருக்கு பிடிக்கவில்லை. 

    மந்திரங்கள் சொல்லி, மணி அடித்து பூஜைகள் செய்வதில் நம்பிக்கை உடைய மாதவபட்டுக்கு பாபா மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஒருநாள் மாதவபட் கனவில் பாபா தோன்றினார். இதனால் ஆச்சரியம் அடைந்த மாதவபட் சீரடி சென்றார். பாபாவை பார்த்தார். ஆனால் அவர் கண்களுக்கு தத்தாத்ரேயராக பாபா காட்சியளித்தார். 

    அதுபோல ஒருநாள் பாபா ஆஞ்சநேயராக காட்சி அளித்தார். அந்த காட்சியை சோம்நாத் தேஷ்பாண்டே, ஷாமா இருவரும் நேரில் கண்டுகளித்தனர். சோலாப்பூரைச் சேர்ந்த சதாசிவ் ஜோஷி என்பவர் சீரடியில் பாபா படத்தில் நரசிம்மரை கண்டார். 3 நாட்கள் அவர் தொடர்ச்சியாக இந்த அற்புதத்தை காணும் பாக்கியத்தைப் பெற்றார்.

    சம்தஷிரங்கி என்ற ஆலய அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்பிகை ‘‘பாபா’’ என்று கூறினாள். உடனே அந்த அர்ச்சகர் பல இடங்களில் விசாரித்து சீரடிக்கு வந்து சேர்ந்தார். பாபாவை கண்டதும் அவர் உணர்ச்சி மேலிட பாபா கால்களில் விழுந்து வணங்கினார். எழுந்து பார்த்த போது, கையில் சூலம் ஏந்தி அம்பாள் போல பாபா தோன்றினார். 

    இப்படி கடவுள்களின் வடிவங்களில் காட்சியளித்த பாபா, சிலருக்கு அவர்களது குரு வடிவங்களிலும் தோன்றி ஆச்சரியப்படுத்தி யதுண்டு. கண்கண்ட தெய்வமாக திகழ்ந்த பாபா, தொலை தூரத்தில் உள்ள பக்தர்களையும் சீரடியில் இருந்தபடியே காத்து அருளினார். அப்படி அவர் தொலை தூர பக்தர்களுக்காக நடத்திய அற்புதங்கள் ஏராளம். அது பற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×