search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாவிஷ்ணுவின் வராக அவதாரத்தின் நோக்கம்
    X

    மகாவிஷ்ணுவின் வராக அவதாரத்தின் நோக்கம்

    மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனை வதம் செய்தார்.
    மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனை வதம் செய்தார். இதனால் அவனது சகோதரரான இரண்யகசிபுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டது. தேவர்களை கொன்று பழிதீர்க்க திட்டமிட்டு மந்தாரமலைக்கு சென்று கடும் தவம் செய்யத் தொடங்கினான். அரக்கர்கள் தேவர்களை கொன்று குவித்தனர். இந்த நிலையில் இரண்யகசிபுவின் மனைவி காயது கர்ப்பிணியாக இருந்தாள்.

    அவள் வயிற்றில் வளரும் சிசுவை கொல்ல திட்டமிட்டு இந்திரன் கயாதுவை சிறைப்பிடித்தான். இதை அறிந்த நாரதர் கயாதுவை மீட்டு தனது குடிலுக்கு அழைத்து வந்தார். நாள்தோறும் அவளுக்கு நாராயணனின் பெருமைகளை கூறினார். கருவில் வளரும் குழந்தைக்கு அஷ்டாட்சர மந்திரத்தை கூறி வந்தார். சகல சாஸ்திரங்களையும் கற்பித்து தர்மாபுதேசம் செய்தார்.

    இதற்கிடையே இரண்யகசிபுவின் கடும் தவத்துக்கு மகிழ்ந்த பிரம்மன் அவன்முன் தோன்றினார். இரண்யகசிபு மகிழ்ச்சியுடன் மிக பணிவாக பிரம்மதேவனை வணங்கி நின்றான். இரண்யகசிபு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றார்.

    அவனோ, ‘இந்த மூவுலகையும் ஆளும் வல்லமை வேண்டும். இரவிலோ, பகலிலோ, தேவர்களாலோ, மனிதனாலோ, விலங்கினாலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்தாலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. என் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் நிலத்தில் சிந்தினாலும், என்னை கொல்ல முயற்சிப்பவன் தலை சுக்குநூறாக வெடித்துவிட வேண்டும்’ என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பிரம்மன்.

    பின்னர் இரண்யகசிபு தனது நகரத்திற்கு திரும்பினான். இதற்கிடையே கயாது அழகிய மகனை பெற்றெடுத்திருந்தாள். நாரதர் கயாதுவையும், அவள் குழந்தையையும் அழைத்து வந்து அவனிடம் ஒப்படைத்தார்.

    இரண்யகசிபு பிரம்மதேவர் கொடுத்த வரத்தின் பலத்தால் மூன்று உலகங்களையும் ஆட்சி செய்தான். தேவர்களையும், முனிவர்களையும் கொன்று குவித்தான். தனது சகோதரனை கொன்ற நாராயணன் பெயரை ஒருவரும் சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டான். ஒரு நாள் பிரகலாதனை அழைத்து குருவிடம் கற்றவற்றில் சிலவற்றை கூறும்படி கேட்டான். அதற்கு அவன் நான் என்ற கர்வம் யாரிடமும் இருக்கக்கூடாது. உலக வாழ்க்கையே மாயை. ஸ்ரீமன் நாராயணனை தியானம் செய்வதே சிறந்தது என்று கூறினான்.

    இதைக்கேட்ட இரண்யகசிபுவுக்கு கடும் கோபம் வந்தது. மகனை மலை உச்சியில் இருந்து உருட்டிவிடும்படி காவலர்களுக்கு கட்டளையிட்டான். அதன்படியே காவலர்கள் மலையில் இருந்து உருட்டிவிட்டனர். பிரகலாதன் நாராயணனை தியானம் செய்தான். சிறுகாயமின்றி தப்பினான். நடந்த விவரம் இரண்யகசிபுக்கு தெரியவர, அவன் கொடிய நாகத்தைவிட்டு கடிக்க சொன்னான். பாம்பு சீறி வந்தது. பிரகலாதன் கரம் குவித்து வணங்கி ‘ஓம் நமோ நாராயணா’ என்றான். சீறிவந்த நாகம் பிரகலாதனை மும்முறை வலம் வந்து பிரகலாதன் பாதத்தில் தலைவைத்து விட்டது.

    இரண்யகசிபுவின் கோபாம் பன்மடங்காக அதிகரித்தது. முரட்டு யானையை விட்டு காலால் மிதிக்க சொல்லி உத்தரவிட்டான். யானை பிரகலாதனை நோக்கி வந்தது. பிரகலாதன் நாராயண மந்திரத்தை உச்சரிக்கவும் யானை பிரகலாதன் முன் மண்டியிட்டு வணங்கியது. இதைப்பார்த்தும் இரண்யகசிபுவின் கோபம் அடங்கவில்லை.

    மனைவியிடம் நஞ்சு நிறைந்த கோப்பையை கொடுத்து, அதை பிரகலாதனிடம் பருகும்படி ஆணையிட்டான். தாயின் வேதனையை கண்ட பிரகலாதன் கோப்பையை வாங்கி நாராயணன் நாமத்தை உச்சரித்துவிட்டு அருந்தினான். அது அவனை ஒன்றும் செய்யவில்லை. இரண்யகசிபு மனம் மாறவில்லை.

    பிரகலாதனிடம் ‘மூடனே, உனக்கு யார் கொடுத்த தைரியம்? மூவுலகிலும் என்னை விட மேலானவன் யார் இருக்கிறார்கள்’ என்று கேட்டான்.

    அதற்கு, ‘முத்தொழிலையும் செய்யும் பரந்தாமனே காரணம்’ என்றான்.

    ‘அவன் எங்கு இருக்கிறான்?’ என்று ஆத்திரமாக கேட்டான்.

    ‘அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்று அமைதியாக பிரகலாதன் கூற, ‘இந்த தூணிலும் இருப்பாரா?, காட்டுபார்க்கலாம்’ என்று கையில் வாளுடன் சென்று தூணை வாளால் வெட்டினான். அப்போது அதிசயம் நடந்தது. தூண் இரண்டாக பிளந்து அதற்குள் இருந்து பயங்கர சத்தத்துடன் நரசிங்கர் தோன்றினார். விலங்காகவும் இல்லை, மனிதனாகவும் இல்லை. தலைசிங்கமாகவும், உடல் மனிதனாகவும் இருந்தது.

    நரசிங்கர் பிடரிமயிர்கள் குலுங்க கர்ஜித்தார். அவரது வாயில் கோரைப்பற்களும், கைகளில் நீண்ட கூர்மையான கரங்களும் இருந்தன. இரண்யகசிபு வாளால் நரசிம்மனை வெட்ட ஓங்க, அதை தட்டிவிட்ட நரசிம்மர் மாலை நேரம் வரும்வரை அவனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். அந்திபொழுது நெருங்கவும் இரண்யகசிபுவை தூக்கிக் கொண்டு நிலைப்படிக்கு வந்து, தனது நகங்களால் அவனது வயிற்றை குத்தி அவன் உடலை கிழித்தார். இரண்யகசிபு மடிந்தான்.

    இதைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மலர்மாலை பொழிந்தனர். நரசிங்கர் மகிழ்ச்சியடைந்து பிரகலாதனை வாழ்த்தி உனக்கு வேண்டிய வரங்களை கேள் என்றான். பிரகலாதன் அவரை வலம்வந்து பாதங்களில் வணங்கி, பரந்தாமா பந்தபாசங்கள், ஆசை, மோகம் ஆகியவை படுகுழியில் விழாமல் தங்கள் திருவடியில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றார். உடனே நரசிம்மர், ‘பிரகலாதா என் பக்தர்கள் பற்றற்ற நிலையில் இருப்பார்கள். அவர்களை ஆசாபாசம் எதுவும் பிடிக்காது. நீ பூலோகத்தை ஆண்டு கடைசியில் என்னை வந்து சேருவாயாக’ என்றார்.

    பின்னர் பிரகலாதனுக்கு முடிசூட்டப்பட்டது. அவன் நீதி தவறாமல் உலகத்தை ஆண்டு வந்தார்.
    Next Story
    ×