search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூச்சந்தை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
    X

    பூச்சந்தை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

    தஞ்சை மாநகர் ரெயில் நிலையம் அருகே கல்லணைக் கால்வாய் என்னும் புது ஆறு அருகே பூச்சந்தை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
    முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் மட்டுமின்றி தனிக்கோவில்களிலும், சிவாலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கி.பி.15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோவில்களில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற வேலவன் உண்டு. அதன் பிறகு குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், ராமலிங்க அடிகள், வண்ணச் சரபம் தண்டபாணி தேசிகர் போன்றோர் கந்தனைப் பற்றி நிறைய ‘பா’ புனைந்துள்ளனர்.

    தஞ்சை பெரிய கோவிலில் ‘தஞ்சை மேவிய பெருமானே’ என்று அருணை முனிவரின் பாடல் பெற்ற ஆறுமுகன் காட்சி தருகிறார். இதே தஞ்சையில், சென்ற நூற்றாண்டில் உருவான சுப்ரமணியர் திருக்கோவில் அருள் ஒளி வீசிகொண்டிருக்கிறது. ஆம்..., தஞ்சை மாநகர் ரெயில் நிலையம் அருகே கல்லணைக் கால்வாய் என்னும் புது ஆறு அருகே பூச்சந்தை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் எழுந்த விதத்தினை செவிவழியாகவும், தல வரலாறு வாயிலாகவும் அறியலாம்.

    சிலை வந்த கதை :

    கடலலை கந்தன் பேர் சொல்லும் செந்தூர் பதியில் ஒரு ஞானி, உறவுகள் ஏதுமின்றி பிரமச்சரியம் கடைப்பிடித்து தவவாழ்வு மேற்கொண்டு, குமரனே கதி என்று வாழ்ந்து வந்தார். அவரிடம் இருந்த ஒரே சொத்து முருகக் கடவுளின் ஐம்பொன் சிலை மட்டும்தான். கடலிலும், நாழிக் கிணறிலும் தானும் நீராடி, முருகனையும் முழுக்காட்டி பூஜைகள் செய்து வந்தார். பிறகு அச்சிலையை துணி மூட்டையில் கட்டி வைத்து விடுவார். இது வழக்கமான நிகழ்வு.

    வயது முதிர்வால் தனக்கு அந்திமகாலம் நெருங்குவதை உணர்ந்த தவசி, தனது வழிபடு தெய்வமான முருகன் சிலையை ஒருவரிடம் ஒப்படைத்து தனக்குப் பிறகும் பூஜைகள் நடக்க வேண்டும் என எண்ணினார்.

    ஒரு நாள் தவசியின் உறக்கத்தில் முதியவராக முருகன் தோன்றி, அவரைக் கைப்பிடித்து ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். இரும்புப் பாதை தண்டவாளங்களைக் கடந்து ரெயில்வே கதவு இருந்தது. அங்கே ஒரு ரெயில் ஊழியரும் நின்றுக்கொண்டிருந்தார். அவரது முகத்தில் தெய்வீக ஒளி வீசியது. ‘என் சிலையை இங்கே கொடு’ என்று முதியவர் வேடத்திலிருந்த முருகன் சொல்லி விட்டு மறைந்து விட்டார். இவை அனைத்தையும் கனவில் கண்டு திடுக்கிட்ட தவசி, முருகன் காட்டிய அற்புதத்தை எண்ணி சிலிர்த்தார்.

    பொழுது விடிந்ததும் தவசி வழக்கம் போல நீராடி, சிலையையும் நீராட்டி பூஜைகள் செய்து எடுத்துக் கொண்டு, இரவில் தான் கனவில் கண்ட இடத்திற்கு சென்றார். அங்கே அந்த ரெயில்வே கதவு மூடப்பட்டிருந்ததையும், அங்கே அந்த ரெயில்வே ஊழியரையும் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அங்கு பணி ஆற்றி வந்த கேட் கீப்பர், தஞ்சை பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர். 

    விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குக் கிளம்புவதற்காக எத்தனித்திருந்தார். அவரது கனவிலும் அன்றைய இரவில் இதே காட்சி வந்து, தெய்வத் திருமேனியை தவசி ஒருவர் வழங்குவதை உணர்ந்ததாகத் தெரிவித்தார். இருவரும் ஆண்டவனின் பேரருளை எண்ணி மெய் சிலிர்த்தார்கள். சிலையைக் கொடுத்து விட்டு தவசி வந்தவழியே திரும்பி விட்டார்.

    தஞ்சையில் செந்தூர் கோவில் :

    ஐம்பொன் திருமேனியைப் பெற்றுக் கொண்ட ரெயில்வே தொழிலாளி, தஞ்சைக்கு அதனை எடுத்துக் கொண்டு வந்து தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இறைவன் திருவிளையாடலைக் கண்ணீர் மல்க கூறினார். இது நடந்தது கி.பி.1904-ம் ஆண்டு. அன்றிலிருந்து தான் இருக்கும் பூக்கொல்லையில் ஒருசிறு குடில் அமைத்து, வேலவன் சிலையை வைத்து விளக்கேற்றி வழிபட்டார். மக்களும் அந்த அற்புதத்தை அறிந்து கொண்டு, முருகனிடம் அன்பு செலுத்தினர்.

    கோவில் ஒன்று எழுப்ப முடிவு செய்த தெருவாசிகளிடம் தஞ்சை ராவ்பகதூர் சீனிவாசன் பிள்ளை என்பவர், தனது இடத்தைத் தானமாகக் கொடுத்தார். தினமும் ஒரு கைப்பிடி அரிசி என வீட்டுக்கு வீடு சேகரித்து, பொதுமக்களைத் திருப்பணியில் ஈடுபடுத்தினர். பல ஆன்மிக அன்பர்களிடம் நன்கொடை பெற்று திருக்கோவில் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது. பூச்சந்தையும், காய்கனிச் சந்தையும் இருக்கும் இடத்தில் இக்கோவில் உருவானதால், வணிகர்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.

    வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருச்செந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட பஞ்சலோக சிலையும் அருகே வைக்கப்பட்டு 1911-ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பிறகு ஆலயம் விரிவு படுத்தப்பட்டு, பலிபீடமும், கொடிமரமும் அதை அடுத்து மயில் மண்டபமும் நிறுவப்பட்டன.

    தென்புறம் விநாயகரும், வடபுறம் திருஞான சம்பந்தரும் சிறு சன்னிதிகளில் விளங்க, உள்ளே மகாமண்டபம் தெரிகிறது. மூலவரைத் தரிசித்த பின்னர் உள் சுற்றில் வலம் வரும்போது, கோமுகம் அருகே, சண்டிகேசர் இருக்கிறார்.

    வெளிச்சுற்றில் காசி விசுவநாதரும், விசாலாட்சியும் காசி கோபுரம் போலவே அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகளில் இருந்து தரிசிக்கின்றனர். அருகே தல விருட்சமான வன்னிமரத்தடியில் விநாயகர் இருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. வடக்கு பிரகாரத்தில் பெரிய கடம்பமரம் செழித்து நிழல் தருகிறது. வட மேற்கு மூலையில் கஜலட்சுமி, துர்க்காதேவி சன்னதிகள் உள்ளன. ஈசானிய மூலையில் நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன.

    திருவிழாக்கள் :

    இத்திருக்கோவில் முருகனுக்கு உகந்த கார்த்திகை மட்டுமல்லாது, கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் அன்ன வாகனத்திலும், இரண்டாம் நாள் மான் வாகனத்திலும், மூன்றாம் நாள் பூதவாகனத்திலும், நான்காம் நாள் யானை வாகனத்திலும், ஐந்தாம் நாள் காளை வாகனத்திலும், ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்ததும் மயில் வாகனம் ஏறி சேவற் கொடியுடன் ஆலயத்தை அடைகிறார். 

    ஏழாம் நாள் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். இரவு முத்துப் பந்தல் நிகழ்ச்சியில் தேவியர் இருவருடன் சுப்ரமணிய சுவாமி ஊர் வலம் வருவார். திருக்கல்யாண நிகழ்ச்சியில் மணமாகாதோர் கலந்து கொண்டு பிரார்த்தித்துக் கொண்டால் மறு ஆண்டுக்குள் திருமணம் கைகூடி விடும். செந்தூர் செல்லமுடியாதவர்கள் இங்கேயே பிரார்த்தித்துக் கொண்டால் எல்லா காரியங்களும் நிறைவேறி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தஞ்சையில் அறுபடை வீடுகள் :

    தஞ்சையின் செந்தூராக கருதி வழிபடப்படும் இத்திருக்கோவிலைப் போலவே தஞ்சையில் அறுபடை வீடுகளுக்கும் தனித்தனி கோவில்கள் உள்ளது.

    மேல அலங்கம் - பரங்குன்றமாகவும், வடக்கு அலங்கம்- பழமுதிர்ச் சோலையாகவும், குறிச்சி தெரு - தணிகையாகவும், ஆட்டுமந்தை தெரு - சுவாமி மலையாகவும், அரிசிக்காரத் தெரு- பழநியாகவும் கருதி... தஞ்சை பக்தர்கள் இந்த அறுபடை வீடுகளுக்கும் ஆடிமாதத்தில் பாதயாத்திரை மேற்கொள்வது காண்போரைக் கவர்ந்திழுக்கும் காட்சியாகும்.
    Next Story
    ×