search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் - கேரளா
    X

    மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் - கேரளா

    கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டத்தில் உள்ள தன்வந்திரி கோவில். இந்த கோவில் வரலாற்றை இன்று பார்க்கலாம்.
    தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும், அந்நோயைத் தீர்த்து நல முடன் வாழ வைக்கும் கோவிலாகக் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    வயலார் கிராமத்தில் வசித்த தம்பான் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவர்களிடம் சென்று, பல சிகிச்சைகள் எடுத்தும், எதுவும் பலனளிக்கவில்லை.

    அவர் ஒருநாள், வைக்கத்தில் உள்ள வைக்கத்து அப்பன் சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு வயிற்று வலி குறைந்தது. ஆனால், அவர் கோவில் வளாகத்தை விட்டு வெளியே வந்தவுடன், அவருக்கு மீண்டும் வயிற்று வலி வந்துவிட்டது. எனவே அவர் அன்றிரவு கோவிலிலேயே தங்கிவிட்டார்.

    அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘இந்தக் கோவிலில் இருக்கும் வரை உனக்கு வயிற்று வலி இருக்காது. நீ கோவிலை விட்டு வெளியேச் சென்றால் மீண்டும் உனக்கு வயிற்று வலி ஏற்படும். இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள கேளம் குளத்தில் மூழ்கினால், உனக்கு நீருக்கு அடியில் மூன்று சிலைகள் கிடைக்கும். முதலில் கிடைக்கும் சிலை அதிகச் சக்தி வாய்ந்தது. எனவே அதனை குளத்திலேயே விட்டுவிடு. இரண்டாவது கிடைக்கும் சிலையை எடுத்துச் சென்று ஒருவருக்குத் தானமாகக் கொடுத்து விடு. மூன்றாவதாக எடுக்கும் சிலையை ஆன்மிக வழிமுறைகளைப் பின்பற்றி நிறுவி வழிபட்டால் உன் வயிற்று வலி நிரந்தரமாக நீங்கும்’ என்றார்.

    அவரும் சிவபெருமான் கனவில் சொன்னபடி, இரண்டாவதாகக் கிடைத்த தன்வந்திரி சிலையை வெள்ளூடு என்ற மனையைச் சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து வழிபாடு செய்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மண்மூசு என்பவரின் உதவியுடன் கோவில் ஒன்று கட்டி, அந்தக் கோவிலில் தன்வந்திரி சிலையை நிறுவினார்.

    அவருக்கு பிறகு வந்த தலைமுறையி னரிடையேக் கோவில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மண்மூசு குடும்பத்தினர் அந்தச் சிலையின் கையை உடைத்து எடுத்துச் சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ஓளச்ச என்ற இடத்தில் அதை நிறுவிக் கோவில் கட்டினர்.

    வெள்ளூடு நம்பூதிரியின் குடும்பத்தினர், தங்களிடமிருந்த சிலையின் உடைந்த கைக்குப் பதிலாக வெள்ளியில் கை ஒன்றைச் செய்து சிலையுடன் பொருத்தி, அந்தச் சிலையை மருத்தோர் வட்டத்தில் கோவில் ஒன்றைக் கட்டி நிறுவினர் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.



    தன்வந்திரி பகவான் :

    இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த 24 தோற்றங்களில் பதினேழாவது தோற்றமாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான், வட்டவடிவமான கருவறையில் மேற்கு நோக்கிப் பார்த்த நிலையில் இருக்கிறார். கருவறையின் இடது புறம் சிவபெருமான் சன்னிதியும், வலதுபுறம் கணபதி, சாஸ்தா, பகவதி சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    ஆலயமானது அதிகாலை 5 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் சிறப்பு பெற்ற ஓணத்திருநாள் மற்றும் பிற திருவோண நட்சத்திர நாட்களிலும் இங்கு பால் பாயசம் வழிபாடு நடக்கிறது. ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வாவு பூஜை மற்றும் சம்கிரம பூஜை ஆகியவை நடத்தப்படுகின்றன. நவராத்திரி, ராமர் பட்டாபிஷேகம் போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    வழிபாட்டுப் பலன்கள்

    * குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலில் சந்தான கோபாலன் எனும் கதகளி வழிபாடு நடத்தினால் அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.

    * 28 வகையான மூலிகைகள், பச்சை மருந்து ஆகியவைகளைத் தயிரில் கலந்து தயாரிக்கப்படும் முக்குடி எனும் மருந்தினை இக் கோவிலின் தன்வந்திரி சிலையின் கையிலுள்ள குடத்தில் வைத்தி ருந்து எடுத்துத் தருகின்றனர். இதனைப் பெற்றுப் பருகுவதால் தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். (இதனைப் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்)

    * விழாக் காலங்களில், கயற்றேல் வானம் என்ற சிறப்பு பூஜை செய்யப் படுகிறது. இப்பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு ஆஸ்துமா, வாத நோய்கள் போன்றவை குண மடையும்.

    * அமாவாசை நாட்களில் நடக்கும் முன்னோர் வழிபாடு (பிதுர்காரியம்) நிகழ்வில் படைக்கப்படும் தாள்கறி எனும் உணவைப் பெற்றுச் சாப்பிடுவதால் நோய்கள் தீரும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    அமைவிடம் :

    பல்வேறு நோய்களைத் தீர்க்க உதவும் இத்தலம் கேரள மாநிலம் சேர்த்தலாவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலப்புழாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இரு நகரங்களில் இருந்தும் இக்கோவிலுக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.
    Next Story
    ×