search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரங்களை அள்ளித்தரும் வடமாத்தூர் மாணிக்க விநாயகர் திருக்கோவில்
    X

    வரங்களை அள்ளித்தரும் வடமாத்தூர் மாணிக்க விநாயகர் திருக்கோவில்

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது வடமாத்தூர் மாணிக்க விநாயகர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது வடமாத்தூர் மாணிக்க விநாயகர் திருக்கோவில். ஜவ்வாதுமலையில் தோன்றி திருவண்ணாமலை மாவட்டத்திற்குப் பாய்ந்து வளம் சேர்க்கும் ஆறாகத் திகழ்வது, சேயாறு ஆகும். இது பாலாற்றின் துணை ஆறாக விளங்குகின்றது.

    சேயாறு வந்த கதை :

    இந்த சேயாறு தோன்றியது குறித்து புராணக்கதை ஒன்று உண்டு. முருகப்பெருமான் தன் அன்னை பார்வதிக்காக நீரூற்று தோன்றிட அம்பெய்தி உருவாக்கியது இந்த ஆறு. இந்த ஆறு உருவானபோது, அதில் 7 ரிஷிகள் மாண்டு போனார்கள். அந்த தோஷம் நீங்கிட, சேயாற்றின் கரையோரம் 7 சிவாலயங்களை நிறுவி, முருகப்பெருமான் வழிபாடு செய்தார். அதன்காரணமாக அவரது தோஷம் நீங்கியது. அதன் முதல் தலம், இவ்வூரின் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காஞ்சி கரைகண்டேஸ்வரர் ஆலயமாகும்.

    அந்த சிறப்புமிகு சேயாறு வளம் சேர்க்கும் பூமியில் வடமாத்தூரும் ஒன்று. யுகங்களைக் கடந்து விண்ணை முட்டி நிற்கும் மலையே இறைவனாக விளங்குவது திருவண்ணாமலை. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர். இதன் வெளிவட்டத்தில் சுமார் 15 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ளது வடமாத்தூர் திருத்தலம். இங்கு சுயம்புவாகத் தோன்றி அருள்பாலித்து வருகிறார் மாணிக்க விநாயகர்.

    தல வரலாறு :

    சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு, இந்த ஊரில் சீதாராமன் என்ற அடியார் வாழ்ந்து வந்தார். அவர் தனது ஊரில் வழிபடுவதற்கு ஆலயம் இல்லாததை நினைத்து கவலை கொண்டார். அதனால் நெடுந்தொலைவில் இருந்து ஒரு விநாயகர் சிலையை எடுத்து வந்து, தன் வீட்டின் அருகே வைத்து வழிபட்டு வந்தார். அவரையே மூலவராக்கி, ஆலயம் எழுப்ப முடிவு செய்திருந்தார்.

    ஆனால் அன்று இரவு அவரது கனவில் தோன்றிய விநாயகப்பெருமான், ‘உன் ஊரிலேயே பல நூறு ஆண்டுகளாக நான் மண்ணில் மறைந்திருக்கிறேன். என்னை எடுத்து நீ ஆலயம் எழுப்பு. அதில் நான் வெளிப்படுவேன். நான் இருக்கும் இடம், நீ ஏர் உழும்போது வெளிப்படும்’ என்று கூறினார். கனவைக் கண்டதும் அடியார் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். இறைவனின் சித்தம் அதுவென உணர்ந்தவர், விடிவதற்காக காத்திருந்தார்.

    பொழுது புலர்ந்ததும் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு, மாடுகளை பூட்டி தனது நிலத்தில் உழ ஆரம்பித்தார். நெடுநேரம் உழுதும் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் இறைவனை நினைத்தபடி மனம் தளராமல் உழுது கொண்டே வந்தார். அப்போது ஏர் கலப்பையை மூன்று கருங்கற்கள் தடுத்து நிறுத்தின. அதைத் தோண்டி வெளியே எடுத்தார். அவற்றில் இரண்டு உருண்டை வடிவிலும், மற்றொன்று சிறிய மூஞ்சுறு வடிவிலும் காட்சி தந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அடியார், அவற்றை தனது இல்லத்திற்குக் கொண்டு வந்தார்.

    ஆனால் உருண்டையான கற்களில் எதை இறைவன் என நினைத்து வழிபடுவது என்பதில் அவருக்குக் குழப்பம். அந்தக் குழப்பத்துடனேயே உறங்கியவரின் கனவில் மீண்டும் தோன்றிய விநாயகர், ‘இரண்டு கற்களில் எதை வேண்டுமானாலும் வைத்து பூஜித்து வா. அதில் நான் என் உருவத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார்.

    மறுநாள் தன் வீட்டின் அருகே உள்ள இடத்தில் கிழக்கு நோக்கியவாறு, ஒரு உருண்டைக் கல்லையும், அதன் எதிரே மூஞ்சுறு வடிவில் இருந்த சிறிய கல்லையும் நிறுவினார். மற்றொரு கல்லை தனியாக வைத்தார். காலப்போக்கில் அவர் நிறுவிய கல்லில் விநாயகரின் உருவம் வெளிப்படத் தொடங்கியது. அதுவரை அவர் மட்டுமே வழிபாடு செய்து வந்த விநாயகரை, இப்போது ஊர் மக்கள் அனைவரும் வழிபடத் தொடங்கினார்கள். இதையடுத்து விநாயகருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. மாணிக்க விநாயகர் என்பது இத்தல இறைவனின் பெயர். பொதுமக்களின் உதவியுடன், விநாயகரை மையமாக வைத்து மதுரநாதீஸ்வரர், மரகதாம்பிகை, வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதி என பெரிய ஆலயமாக கட்டப்பட்டது.

    இத்தலத்தில் உள்ள மாணிக்க விநாயகரை, மூன்று சதுர்த்தி தினங்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம், ராகு–கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், திருமணத்தடை நீங்கவும், கணவன்– மனைவி இடையே ஒற்றுமை மேம்படவும், தாலி பாக்கியம் நிலைத்திடவும் சிறந்த பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.



    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய ஆலயம், எளிய நுழைவு வாசலைக் கொண்டு காட்சியளிக்கிறது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றன. கருங்கல் கூரையால் ஆன கருவறை முன் மண்டபத்தை அடுத்து, இடதுபுறம் எளிய வடிவில் அழகுற காட்சி தருகிறார் மாணிக்க விநாயகர். வலதுபுறம் வள்ளி– தெய்வயானை சமேத முருகப்பெருமான் எளிய வடிவில் அருளாசி வழங்குகின்றார். இவர்களுக்கு நடுநாயகமாக இறைவன் மதுரநாதீஸ்வரர், கிழக்கு நோக்கி காணப்படுகிறார். கருவறை சுவரில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரது வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    அன்னை மரகதாம்பிகை சன்னிதி கி.பி. 1921–ல் கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அன்னை நின்ற கோலத்தில் எளிய வடிவுடன் அருளாசி வழங்குகின்றார். ஈசான்ய மூலையில் நவக்கிரக சன்னிதியும், அதன் அருகே மேற்கு பார்த்தபடி கால பைரவர் சன்னிதியும் உள்ளன. காலை 6 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    விழாக்கள்:

    இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை, மகா சிவராத்திரி, மார்கழி மாத அபிஷேகம் என அனைத்து விழாக்களும் சிறப்போடு நடத்தப்படுகின்றன. தல மரமாக வில்வமும், தலத் தீர்த்தமாக ஆலயத்திற்குள் உள்ள கிணற்றில் இருக்கும் கங்கா தீர்த்தமும் அமைந்துள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது வடமாத்தூர். சென்னைக்கு தென்மேற்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும், போளூருக்கு தெற்கே 43 கிலோமீட்டர் தூரத்திலும், செங்கத்திற்கு கிழக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை– காஞ்சி (காஞ்சீபுரம் அல்ல) பேருந்து வழித்தடத்தில், பெரியகுளம் நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 2 கிலோமீட்டர் பயணம் செய்தால் வடமாத்தூரை அடையலாம்.
    Next Story
    ×