search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சர்ப்ப தோஷம் போக்கும் நாகேஸ்வரமுடையார் கோவில்
    X

    சர்ப்ப தோஷம் போக்கும் நாகேஸ்வரமுடையார் கோவில்

    ராகு தோஷம் உள்ளவர்கள் நாகேஸ்வரமுடையார் கோவிலில் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
    ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு கிரகப் பதவியை அடைந்தனர். அந்த இறைவன் பெயர் நாகேஸ்வரமுடையார், இறைவி புன்னாக வல்லி. இவர்கள் அருள்பாலிக்கும் ஆலயம் சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவில்.

    ஆலய அமைப்பு :

    கோவிலின் முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், உள்ளே நுழைந்ததும் அழகான வேலைபாடுகளுடன் கூடிய மகா மண்டபம் உள்ளது. அதனை அடுத்து அர்த்த மண்டபமும், கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவன் நாகேஸ்வர முடையார் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவி புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்புரிகிறாள்.

    தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. பிரகாரத்தின் தென் மேற்குத் திசையில் நாக மாணிக்கத்தை வைத்து பூஜை செய்த மாணிக்க விநாயகரும், மேற்கு திசையில் வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமானும், வடமேற்கு திசையில் சண்டிகேசுவரரும், வடகிழக்கு திசையில் சூரியன், விநாயகர் மற்றும் பைரவரும், தென்கிழக்கு திசையில் வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் காட்சி தருகின்றனர்.

    இக்கோவிலில் ஆகம விதிப்படி துர்க்கை மற்றும் நவக்கிரக சன்னிதிகள் இல்லை. ராகுவின் நண்பன் சனி என்பதால் சனி தன் மனைவியுடன் ராகுவின் சன்னிதியில் இருக்கிறார். மேலும் ராகு, கேதுவுக்கு இந்த ஆலயத்தில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் ஆதி ராகு தலமாகவும் அழைக்கப்படுகிறது.

    அமுதம் உண்ட அசுரன், சிரம் வெட்டப்பட்டு சீர்காழியில் விழுந்தான். எனவே இத்தலம் சிரபுரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது தவிர பிரம்மபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், புறவம், சண்பை, காளிபுரம், கொச்சைவையம், கழுமலம் என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

    ராகுவுக்கும் கேதுவுக்கும் கிரகப்பதவி கிடைத்தது அல்லவா? அது என்ன கதை?

    பூர்வ காலத்தில் தேவரும், அசுரரும் கூடி மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து லட்சுமி, தன்வந்திரி, சிந்தாமணி, ஐராவதம், ஆலகால விஷம், காமதேனு முதலியன தோன்றின. தொடர்ந்து நரை, திரை, பிணி, மூட்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாகிய தேவாமிர்தம் தோன்றியது.

    அசுரர்கள் இந்த தேவாமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது. மேலும், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே எப்போதும் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். எனவே, அசுரர்களை எப்படியாவது அமிர்தத்தை உண்ணாமல் தடுத்துவிட வேண்டும் என்று எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார்.

    மோகினியின் அழகைக் கண்ட அசுரர்கள் மதிமயங்கினர். உணர்விழந்து செயலற்று நின்றனர். இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்த மோகினி உருவிலிருந்த மகாவிஷ்ணு, தேவர் களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார்.

    அசுரர்களில் விப்ரசித்திக்கும், இரணியனின் தங்கை சிம்கை என்பவளுக்கும் பிறந்த ‘சியிங்கேயன்’ என்பவன் தேவ வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தைப் பரிமாறிக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அதைக் குறிப்பால் உணர்த்தினர். அவர் தன் கையிலிருந்த சட்டுவத்தால் (கரண்டி) அந்த அசுரனை ஓங்கி அடித்தார்.

    அடித்த வேகத்தில் அந்த அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு, தலை ‘சிரபுரம்’ என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் ‘செம்பாம்பின் குடி’யிலும் விழுந்தது. தேவார்மிதம் உண்டதால், அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாயிற்று.

    இந்த அரவங்கள் சிவபெருமானைத் தியானித்து, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு கடும் தவம் புரிய, இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

    அப்போது அரவங்கள் சிவபெருமானிடம் சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கு அருளுமாறு வேண்டினர்.

    ‘சூரிய, சந்திரர்கள் உங்களுக்குப் பகைவர்கள்தான். ஆனால், அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே, அமர பட்சம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நீங்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தலாம்’ என்று இறைவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.

    மேலும் இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ‘ராகு’வும், பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டு ‘கேது’வும் தோன்றினார்கள். அதுவரை இருந்த ஏழு கிரகங்களுடன் சேர்ந்து ஒன்பது கிரகங்களாக (நவக்கிரகங்களாக) அவர்கள் விளங்கும்படி வரமளித்தார் சிவபெருமான் என்பது புராண வரலாறு.

    இந்த ஆலயத்தில் தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இங்கு ஞாயிறு அன்று நடைபெறும் பரிகார பூஜை சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

    ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி அன்று நாகேஸ்வரமுடையாருக்கு, 150 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அபிஷேகம் அன்னத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

    பிரதி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு சுவாமி, அம்மன் மற்றும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள் ராகு, கேது சன்னிதிகளை இடதுபுறம் 9 முறையும், வலதுபுறம் 3 முறையும் அடி பிரதட்சணம் செய்கின்றனர். இப்படி 11 வாரம் செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.

    இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனத்தைப் பாதுகாப்பதற்காக விநாயகர், காகம் வடிவம் கொண்டு, அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து விட்டதால் வந்த தீர்த்தமே கழுமல நதியாகும். இதுவே இந்த ஆலயத்தின் தீர்த்தம். இந்த நதி ஆலயத்தின் மேற்குத் திசையில் ஓடு கிறது.

    ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    ராகு தோஷம் உள்ளவர்கள் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.

    நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ தொலைவில் கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம்.

    இந்த கோவில் பற்றிய தகவல் அறிய இந்த எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்: 9443785862
    Next Story
    ×