search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்வியில் சிறப்புறச் செய்யும் பனச்சிக்காடு சரஸ்வதி கோவில்
    X

    கல்வியில் சிறப்புறச் செய்யும் பனச்சிக்காடு சரஸ்வதி கோவில்

    குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது.
    குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது. இந்தத் தலம் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சிங்கவனம் நகருக்கருகில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு:

    சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் பனச்சிக்காடு என்னும் இடத்தில், கீழப்புரத்து இல்லத்தைச் சேர்ந்த தாமோதர நம்பூதரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் வேதனையில் துவண்டு வந்தார். அவர் அங்கிருந்த விஷ்ணு கோவிலில் தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி, தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். இந்தநிலையில் ஒருநாள் அவரது கனவில், ‘கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால், அவர் விருப்பம் நிறைவேறும்’ என்று ஓர் அசரீரி ஒலித்தது. அதன்பின்னர் தாமோதர நம்பூதரி, ஆண்டுதோறும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று, தனக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டி வழிபட்டு வந்தார்.

    இவ்வாறு ஒரு முறை அவர் கொல்லூர் சென்று அம்பிகையை வழிபட்டு பின்னர் பனச்சிக்காடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு கோவிலுக்கு தென்புறம் உள்ள குளக்கரையில், தன் குடையை வைத்துவிட்டு நீராடினார். நீராடிய பின் கரைக்குத் திரும்பிய நம்பூதரி, தான் கரையில் வைத்துச் சென்ற குடையை எடுத்தார். அவரால் அந்தக் குடையை எடுக்க முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை.

    அப்போது, ‘தாமோதரா! உனக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்காதது பற்றி வருந்தாதே. ஆதிசங்கரர் இங்கிருந்த மூகாம்பிகையை, கொல்லூருக்குக் கொண்டு சென்று எழுந்தருளச் செய்தார். இப்போது அவளது வடிவமான சரஸ்வதி, உனது குடையில் அமர்ந்து உன்னுடன் இங்கே வந்திருக்கிறாள். நீ இங்குள்ள காட்டிற்குள் சென்று பார். அங்கு உனக்குக் குழந்தை வடிவிலான சரஸ்வதி சிலை ஒன்று கிடைக்கும். அதை இத்தலத்தில் நிறுவி, குடையில் இருக்கும் சரஸ்வதியை அதில் எழுந்தருளச் செய்து வழிபட்டு வா!’ என்று ஓர் அசரீரி கேட்டது.



    அதனைக் கேட்ட நம்பூதரி காட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு குழந்தை வடிவிலான சரஸ்வதி சிலை கிடைத்தது. அந்தச் சிலையை எடுத்து வந்த அவர், தான் குளக்கரையில் வைத்து எடுக்க முடியாமல் போன, குடை இருந்த இடத்தில் அந்தச் சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். நம்பூ தரியைத் தொடர்ந்து தற்போது ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சரஸ்வதி தேவியை வழிபட்டு வருகின்றனர்.

    நம்பூதரி வழிபட்ட சரஸ்வதி தேவியின் சிலையைச் சுற்றிலும் தற்போது வெற்றிலைக் கொடிகள் சூழ்ந்து விட்டன. இதற்கு அடியில் மூகாம்பிகை கோவிலில் இருந்து, சரஸ்வதி எழுந்தருளிய குடை இருக்கிறது. இதை அனைவரும் பார்க்க முடியும். ஆனால், குழந்தை சரஸ்வதி சிலையைப் பார்க்க முடியாது. ‘சரஸ்’ என்றால் தண்ணீர் என்றும், ‘வதி’ என்றால் தேவி என்றும் பொருள். இதனடிப்படையில் இந்தக் கோவிலை ஒரு குளம் சூழ்ந்துள்ளது என்று இங்குள்ளவர்கள் சொல்கின்றனர்.

    தற்போது கிணறு போன்ற பள்ளத்தில் மறைந்திருக்கும் தேவியைப் பார்த்து வணங்க முடியாததால், பக்தர்களின் பார்வைக்காக இங்கு மேற்கு திசையைப் பார்த்தபடி கல் ஒன்றை நிறுவி, அதனைச் சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவிலில் இருக்கும் சரஸ்வதி தேவி, கொல்லூரிலிருந்து தெற்காக வந்து கோவில் கொண்டிருப்பதால், இந்த மூகாம்பிகையைத் ‘தெற்கு மூகாம்பிகா’ (தட்சிண மூகாம்பிகா) என்றும் அழைக்கின்றனர்.

    நவராத்திரி வழிபாடு :

    இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா நாட்களில் சரஸ்வதி தேவிக்குக் குழந்தை வடிவில் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நவராத்திரியின் இறுதிநாளான விஜயதசமி அன்று அதிகமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.

    இந்நாளில் பலர் தங்கள் குழந்தையுடன் வந்து தங்கள் குழந்தைகளின் கல்வித் தொடக்கத்திற்கான (வித்யாரம்பம்) வழிபாடுகளைச் செய்கின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் குழந்தைகளின் புத்தகம், எழுதுகோல்களைக் கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்து, குழந்தைகளின் கல்வி மேலும் சிறப்படைய வணங்கிக் கொள்கின்றனர். நடனம், இசை, சிற்பம் போன்ற பல்வேறு துறையில் இருக்கும் கலைஞர்கள் தங்கள் கலை மேலும் வளர்ச்சியடைந்து, அந்தக் கலையில் சிறப்புகளைப் பெற்றிட வேண்டுமென்று வழிபட்டுச் செல்கிறார்கள்.



    குழந்தைப் பேறு:

    குழந்தையில்லாத தம்பதியர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து சரஸ்வதி தேவியின் மதிய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பால், சர்க்கரை மற்றும் பச்சரிசி சேர்த்துச் செய்யப்படும் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    கல்வித் தொடக்க வழிபாடு :

    தங்களுடைய குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைந்திட விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் பிறந்த நாளின் போதோ அல்லது குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகவோ, தங்கள் குழந்தையுடன் இந்தக் கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம், பால்பாயசம் போன்றவற்றைப் படைத்து, தங்கள் குழந்தைகளின் கல்வித் தொடக்கத்திற்கான (வித்யாரம்பம்) சிறப்பு வழிபாடுகளை செய்கின்றனர்.

    இவ்வழிபாட்டின் போது, பெற்றோர் தங்கள் குழந்தையினை நீராட்டி, புத்தாடை அணிவித்து, சரஸ்வதி தேவியை வணங்கி, தங்கள் குழந்தையின் விரல் பிடித்து அரிசியில் எழுத வைக்கின்றனர். இதற்காக இந்தக் கோவிலைச் சுற்றி மூன்று பக்கங்களில் குழந்தைகள் எழுதுவதற்கு வசதியாக கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு, அதில் அரிசி நிரப்பப்பட்டிருக்கும்.

    சிலர், இந்தக் கோவிலில் இருக்கும் வித்யா மண்டபத்திற்குச் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் குருவின் மடியில் தங்கள் குழந்தையை அமர வைக்கின்றனர். அவர் தங்க நாணயத்தினால் குழந்தையின் நாவில் ‘ஹரிஸ்ரீ’ என்று எழுதுகிறார். அதன் பிறகு, பெற்றோர் தங்கள் குழந்தையின் விரல் மூலம் தட்டில் நிரப்பப்பட்டிருக்கும் அரிசியில் எழுத வைக்கின்றனர். குழந்தையின் பெற்றோர் இந்த அரிசியில் சிறிதைத் தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்வதற்காகக் கேட்டுப் பெற்றுச் செல்கின்றனர்.

    அமைவிடம்:

    கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து சங்கனாச்சேரி செல்லும் வழியில், 11 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கவனம் என்ற இடம் உள்ளது. அதன் அருகில் பனச்சிக்காடு திருத்தலம் அமைந்துள்ளது.
    Next Story
    ×