search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கடங்கள் தீர்க்கும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்
    X

    சங்கடங்கள் தீர்க்கும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்துள்ளது சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்.
    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்துள்ளது சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படுகிறது.

    பம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் எழிலாக அருள்பாலிக்கிறாள் தேவி.

    சர்வேஸ்வரியும், அன்னபூரணியும், அபயம் தேடி வருப வர்களுக்கு அருளை வாரி வழங்கும் தெய்வமுமான ஸ்ரீசக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பெண்கள் பலர் புண்ணிய சுமையாக, இருமுடி கட்டி விரதம் இருந்து சக்குளத்து அம்மனை தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் இங்கு வந்து சக்குளத்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    பொங்கல் விழா :

    சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தேவி சந்தோஷத்தோடு அருள் புரிகிற கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் தேவியின் இஷ்ட நிவேத்தியமான பொங்கல் வைத்து தேவியின் அருளை பெறு கிறார்கள். இந்த நாளில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக் கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரிய தரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி சுப முகூர்த்த வேளையில் தீயை பற்ற வைத்து தொடங்கி வைப்பார். அப்போது பருந்து கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும்.

    அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டங்களை எடுத்துச்சென்று நிவேத்ய தீர்த்தம் தெளிப்பார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும்.

    தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருப்பவர் களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள். இதனால் ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது.

    இங்கு, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தில் கார்த்திகை ஸ்தம்பம் (சொக்கப்பனை) கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றி தேவியை எழுந்தருளச் செய்வதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும் என்பது ஐதீகம்.

    நாரி பூஜை (பாத பூஜை) :

    உலகின் பல பகுதிகளில் பெண்களுக்கு கொடுமை இழைக்கப்படுகின்ற இந்த காலகட்டத்தில், உலகில் எங்கும் இல்லாத ஒரு சம்பிரதாயமாக இக்கோவிலில் நாரி பூஜை நடக்கிறது. பெண்களை பீடத்தில் அமரச் செய்து, தேவியாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் நீர் ஊற்றி கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குகிறார்.



    எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும்.

    தமிழ் மாத முதல் வெள்ளிக்கிழமை :

    இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும். நாவில் தேவியின் மந்திரமும், மனதில் தேவியின் ரூபமுமாய் பக்தர்கள் கூட்டமாக வருகை தருகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் பறந்துவிடுகிறது என்பது நம்பிக்கை. முதல் வெள்ளிக்கிழமை அன்று தேவியை கோவிலுக்கு வெளியே எழுந்தருளச் செய்து ஜாதி- மத பேதம் இன்றி சர்வமத பிரார்த்தனை நடைபெறுகிறது. இது ஐஸ்வரியத்துக்கு வழிகாட்டுகிறது.

    குடிகாரர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் அழைத்து வரப்படுகிறார்கள். தலைமை பூசாரி சில மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, தேவியின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பின் குடிகாரர்கள் குடியை நிறுத்தி விடுகிறார்கள் என்ற நம்பிக்கையில் இது இன்றும் நடந்து வருகிறது. சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக அதற்குரிய தண்டனை கிடைக்கிறது. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்படுகிறது.

    வெற்றிலை ஜோதிடம் :

    தேவியின் அருள்பெற்ற இக்கோவிலின் முக்கிய காரிய தரிசியான ராதாகிருஷ்ணன் நம்பூதிரி 7 வெற்றிலையும், ஒரு பாக்கையும் கொண்டு மிக துல்லியமாக சொல்லும் வெற்றிலை ஜோதிட பிரசன்னம் மிகவும் பிரபலமானதாகும்.

    கேரளாவில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரமுகர்களும் தங்களது எதிர் காலத்தையும், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள இங்கு வருகை தரு கிறார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பட்ட மக்களும் வந்து அம்மனை வழிபட்டு செல்லும் புண்ணிய தலமாக சக் குளத்து அம்மன் கோவில் திகழ்கிறது.

    தனது சொந்த அனுபவங்களை ஒருவர் மற்றவரிடம் சொல்லி தகவல் பரவுவதால் இன்று தேவியின் புகழ் கேரளாவில் மட்டும் இன்றி பல மாநிலங்களிலும் பரவி வருகிறது.

    கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் நேரடியாக இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது.
    Next Story
    ×