search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தைப்பேறு அருளும் சூலக்கல் மாரியம்மன் கோவில்
    X

    குழந்தைப்பேறு அருளும் சூலக்கல் மாரியம்மன் கோவில்

    சூலக்கல் மாரியம்மன் கோவிலில் குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறாம்.
    அற்புதங்கள் பல நிகழ்த்தி, அரிய வரங்கள் தரும் அன்னையாகத் திகழ்கிறாள். சூலக்கல் மாரியம்மன்.

    அது என்ன சூலக்கல்?

    கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த காலம். அப்போது காவடிக்கா நாடு என்ற பகுதி கண்ணப்பநாயனார் வம்சாவளியில் வந்தவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இங்கு புரவிப்பாளையம் பகுதியில் உள்ள கிராமம்தான் "சூலக்கல்'.

    இங்கு கோயில் அமைந்ததற்குக் காரணம் என்ன?

    அக்காலத்தில் பசுமையான மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இக்கிராமத்திற்கு. சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவர்.
    வேலாயுதம்பாளையம் எனும் கிராமத்தில் இருந்த ஒருவரது பசுக்களை மேய்ச்சலுக்கா வேலைக்காரச் சிறுவன் இப்பகுதிக்கு ஓட்டி வருவது வழக்கம்.
    ஒரு சமயம் அப்பசுக்கள் பொழியும் பால் அளவு குறைந்துகொண்டே வந்தது அவரை கவலையில் ஆழ்த்தியது. ஒருநாள் வனத்துக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை மறைந்திருந்து கவனித்தார்.

    அப்போது அப்பசுக்கள் கூட்டமாய் ஓரிடத்தில் கூடி நின்று பால் பொழிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபத்தின் உச்சகட்டத்தில் பசுக்களை தடியால் அடித்துக் விரட்டினார்.

    பயந்து ஓடிய ஒரு பசுவின் கால் (குளம்பு) ஒரு சுயம்வின் மேல் பதிந்து ரத்தம் வழிந்தது. பயந்துபோன அவர் அவ்விடத்தை கூர்ந்து கவனித்தபோது சுயம்பு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்டு அங்கு ஒரு பெண்தெய்வம் எழுந்திருளிப்பதை உணர்ந்தார். தன்செயலுக்காக வருந்தினார்.

    அன்றிரவு பசுவின் உரிமையாளரின் கனவில் அம்பிகை தோன்றி, "சுயம்புவாகத் தோன்றி உள்ளது மாரியம்மனாகிய நான் தான். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டி என்னை வழிபடுங்கள்!' என்று கட்டளை இட்டார். சூலத்திற்கு அருகில் கல் இருந்ததால் அந்த இடம் சூலக்கல் என்ற பெயரினை பெற்றது. அங்கு மாரியம்மன் குடி கொண்டிருந்ததால் "சூலக்கல் மாரியம்மன்' என்றே அழைக்கப்பட்டார்.

    சுயம்புவை வையமாக வைத்து கருவறையும் மகா மண்டபமும் கட்டி முடித்தனர். அருகில் விநாயகருக்கும் தனிச் சன்னதி அமைத்து பூஜை செய்யத்துவங்கினர்.1994ம் /ஆண்டு புதியதாக அம்மன் சிலை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்னை அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும்; இடது கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தி எழில் கோலத்தில் அருள்பாலிக்கிறார். வடக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. பொதுவாக பெண காவல் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருப்பதை பழங்கால மரபு "வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.



    கருங்கற்களால் கட்டப் பெற்ற கருவறையும் மகாமண்டபமும் நாயக்க மனனர் காலத்திய கட்டடக் கலையை நினைவூட்டுகிறது. சன்னதியின் வெளிப்பிராகரத்தில் மேற்குப் பகுதியில், சுதையால் ஆன மூன்ற குதிரைகளும் கிழக்குப் பகுதியில் இரண்டு குதிரைகளும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. இக்குதிரைகளை அடுத்து "மாவிலங்கம்' எனும் தல விருட்சம் உள்ளது. அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள், சூலக்கல் மாரியம்மன். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர்.

    குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறாம். குழந்தை பிறந்தவுடன் அம்பிக்கு நேர்த்திக் கடன் செலுத்தவும் அவர்கள் தவறுவதில்லை. காலை 5.30 முதல் மதியம் 1 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 78 மணி வரையிலும் திறந்திருக்கும். இவ்வாலயத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்தநாள்கள்.

    தமிழ் வருடப் பிறப்பு, ஆடி அமாவாசை, கார்த்திகை பிறப்பு, ஆடி அமாவாசை, காத்திகை தீபாவளி, தைப்பொங்கல் ஆகிய விசேஷ தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் திரளான பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்கின்றனர்.

    இத்தலத்தின் தலையாய திருவிழா தேர்த்திருவிழாகும். சித்திரை மாதம் கடைசி செவ்வாயன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இதனை நோன்பு சாற்றுதல் என்பர்.பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இதனை நோன்பு சாற்றுதல் என்பர். அன்றிலிருந்து ஏழாம் நாள் கிராம சாந்தி எனும் நிலத்தூய்மை செய்யப்படுகிறது. பின் சப்பரம், சிம்மவாகனம், குதிரைவாகனம், அன்ன வாகனம் என ஆறு நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் அம்மன் திருவீதி உலா வருவாள். இரவு திருவீதி உலா தொடங்கும் முன்பு ஊஞ்சல் பூஜை நடைபெறும்.

    நோன்பு சாற்றிய 15ம் நாள் மாவிளக்கு வரிசைகளும், பொங்கல் பொங்கி நிறைந்திருக்கும். காட்சியும் கண்டுகொள்ளாக் காட்சியாகும். அன்றைய தினம் மாலையில் அம்மனுக்கத் திருக்கல்யாணம் நடத்துவர். வியாழன் முதல் சனி வரை திருத்தேர் வடம் பிடிக்கப்படும். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஆடி அமைந்து வரும் அழகே தனிதான். ஜாதி பேதமின்றி அனைத்து இனத்தவரும் இணைந்து தேர் வடம் பிடித்து இழுப்பது கொங்கு மண்ணின் மரபாகும்.

    சனிக்கிழமை தேர் நிலையடைந்த இரவே, தேர்வலம் வந்த அதே வீதிகளில் அம்மன் மீண்டும் உலா வந்து அருள்பாலிப்பாள். இத் தேர்க்கால் பார்த்தல் எனப்படும். அடுத்தநாள் ஞாயிறன்று மஞ்சள் நீராட்டு, மகா அபிஷேகத்துடன் விழா இனிதே நிறைவு பெறும்.
    கிராமங்களில் இம்மாதிரி ஒற்றுமையோடும் நல் இணக்கத்தோடும் வாழ வழிவகை செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் வழியாகப் பயணித்தால் 11கி.மீ தொலைவில் சூலக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் பாளையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. டவுன் பஸ் வசதி உண்டு.
    Next Story
    ×