search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மக்களைக் காக்கும் சிவந்தியப்பர் திருக்கோவில்
    X

    மக்களைக் காக்கும் சிவந்தியப்பர் திருக்கோவில்

    திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பழமை வாய்ந்த சிவந்தியப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பழமை வாய்ந்த சிவந்தியப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன் திருநாமம் ‘சிவந்தியப்பர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம் வழியடிமை கொண்ட நாயகி. தலவிருட்சம் வில்வம். தல தீர்த்தம் வாண தீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்).

    முன்காலத்தில் சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தார். சிறந்த சிவ பக்தரான அவர், தன்னுடைய நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவ ஆலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதன்படி இந்தத் தலத்தில் சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து கோவில் எழுப்பினார்.

    இதையடுத்து மன்னனின் பெயராலேயே, இறைவனும் அழைக்கப்படலானார். இங்கு வீற்றிருக்கும் இறைவன், அரசர் போல இருந்து மக்களைக் காப்பார் என்று கூறப்படுகிறது. எனவே அரசருக்குச் செய்யும் மரியாதைப் போலவே, சிவலிங்கத்தின் மீது தலைப்பாகை சூட்டி அலங்கரிக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்துள்ளது. ஆனால் இப்போது இந்த முறை வழக்கத்தில் இல்லை.

    தெற்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கிறார் ‘வழியடிமை கொண்ட நாயகி’. இந்த அன்னையை வேண்டிக் கொண்டால், வாழும் காலம் சிறப்பாக இருக்கும். மேலும் வாழ்க்கைக்குப் பின் வரும் முக்தி நிலையையும் அடைய முடியும். இங்குள்ள சிவபிரானுக்கு வஸ்திரம் அணிவித்து, வில்வ இலையால் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆலயத்தில் நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.



    சிவன் சன்னிதியின் நுழைவு வாசலில் பைரவர், அதிகார நந்தி இருவரும் எதிரெதிரே உள்ளனர். பிரகாரத்தில் ஆறுமுக நயினார் (முருகப்பெருமான்) வீற்றிருக் கிறார். இவருடன் வள்ளி - தெய்வானை உள்ளனர். பொதுவாக முருகப்பெருமானுடன் இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும் முருகருக்கு வலது பக்கமும், இடது பக்கமுமாக இருந்து பக்தர்களை பார்ப்பது போல் அமைந்திருக்கும்.

    ஆனால் இந்த ஆலயத்தில் ஆறுமுகநயினாருக்கு வலது பக்கமும், இடதுபக்கமுமாக இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும்படியாக நின்றபடி அருள்பாலிக்கின்றனர். இதுவேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும். பொதுவாக தட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடி காட்சி தருவார். ஆனால் இந்த தலத்தில் தனது இடது கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. நாகதோ‌ஷம் உள்ளவர்கள், இந்த தட்சிணாமூர்த்தியை வேண்டிக்கொண்டால் தோ‌ஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    இந்த ஆலயத்தில் புரட்டாசியில் நடைபெறும் பிரமோற்சவம் சிறப்பு வாய்ந்தது. ஐப்பசியில் இறைவனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது விக்கிரமசிங்கபுரம் திருத்தலம்.
    Next Story
    ×