search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்தர் வாழும் ஒற்றை மலை கோவில்
    X

    சித்தர் வாழும் ஒற்றை மலை கோவில்

    சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணா புரம் ஒன்றியத்தில் உள்ள தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஒற்றை மலை.
    சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணா புரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும். இந்த மலையைத்தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒற்றை மலை என்று குறிப்பிடுகின்றனர். இந்த மலை ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்த மலையில் ஒரு மர்மக் குகை இருப்பதாகவும், அதற்கு பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அங்குள்ளவர்கள் சில அமானுஷ்ய தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.

    ‘பாதாள குகைக்குள் விஷப்பூச்சிகள் அதிகம். அதனால் யாரும் நுழைய முடியாது. இந்தக் குகையில் கொங்கண சித்தர் என்ற முனிவர் வாழ்ந்ததாகவும், அவர் பல சித்து விளையாட்டுகளை செய்து வந்ததோடு, மருத்துவ மூலிகைகளை பயன் படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாக காணப்படுகிறது. 2-வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது. அதனுள் மைதானம் போன்ற இடமும், அதில் அமைக்கப்பட்ட நாலு கால் மண்டபத்தில் தங்கப் புதையலும் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்றைக்கும் அந்த சித்தர்தான் பாதுகாத்து வருவதாகவும் இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேல போய், ‘அந்த குகைக்குள் தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி சித்தர் ஓய்வெடுத்து வருகிறார்’ என்கிறார்கள்.



    ‘குகைக்குள் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே..’ என்ற அசட்டு தைரியத்தில் சில அசகாய சூரர்கள் முயற்சி செய்தும் பார்த்துள்ளனராம். ஆனால் அவர்களால் அந்த துவாரத்தின் வழியே சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு, போன வேகத்திலேயே பின்வாங்கிவிட்டார்களாம்.

    குகைக்கு வெளியே மலைப் பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு, அதில் மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் இருக்கிறது. இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாகவே அந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர்.

    பாதாள குகைக்கு முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட பல சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் தவறாமல் வழிபாடு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×